Published : 19 Mar 2020 09:44 PM
Last Updated : 19 Mar 2020 09:44 PM
நெல்லை மாவட்டம் வள்ளியூர் முதல் திருச்செந்தூர் வரையிலான 64 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படுகிறதா? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார்.
திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான கனிமொழி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் எழுத்து மூலம் கேள்வி கேட்டார். அதில், ''நெல்லை மாவட்டம் வள்ளியூர் முதல் திருச்செந்தூர் வரையிலான 64 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படுகிறதா? இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? அப்படியென்றால் அதன் தற்போதைய நிலை என்ன?'' என்று கேட்டார்.
அதற்கு மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று பதில் அளிக்கையில், “தற்போது மாநில நெடுஞ்சாலையாக இருக்கும் வள்ளியூர் முதல் திருச்செந்தூர் வரையிலான 64 கி.மீ. சாலையை கொள்கை அளவில் தேசிய நெடுஞ்சாலையாக ஆக்க அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையாக உயர்த்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் போக்குவரத்து, இணைப்பு, தொழில்நுட்பப் பொருளாதாரக் கூறுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஆராய்ந்து இறுதி செய்த பிறகு மாநிலச் சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT