Last Updated : 09 Aug, 2015 07:16 PM

 

Published : 09 Aug 2015 07:16 PM
Last Updated : 09 Aug 2015 07:16 PM

பிஹாரில் நடப்பது வன ஆட்சி: நிதிஷ் மீது மோடி தாக்கு

பிஹாரில் வன அரசு நடைபெறுவதாகவும், அதிலிருந்து விடுபட பாஜக கூட்டணியை மக்கள் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது பிஹாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக 31 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் நிதிஷ்குமார், லாலு பிரசாத் கூட்டணி 6 இடங்களை கைப்பற்றியது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. பாஜக கூட்டணியில் லோக் ஜன சக்தி, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் கயாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பேசியது:

கடந்த 25 ஆண்டுகளாக கபடம், சுரண்டல், கர்வத்தால் பிஹார் மாநில மக்கள் வதைபட்டுள்ளனர். இந்த ஆட்சி அடுத்த 5 ஆண்டுக்கும் தொடர வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்யவேண்டும்.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் அவர் சிறைவாசமும் அனுபவித்துள்ளார். சிறைக்குச் செல்பவர்கள் அங்கு இன்னும் நிறைய கெடுதல்களை தெரிந்து கொண்டுவருகின்றனர்.

அண்மையில் பாஜக தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார் அதற்கு ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமுமே பொறுப்பு.

பிஹாரில் தற்போது வன ஆட்சி நடைபெறுகிறது. இதில் இருந்து விடுதலைப் பெற சட்டப்பேரவைத் தேர்தல் நல்லதொரு வாய்ப்பு. வன ஆட்சியின் இரண்டாவது அத்தியாயம் மாநிலத்தில் தொடர அனுமதித்தால் பெரும் பேரழிவு ஏற்படும்.

பாஜக ஆட்சி நடைபெறும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன. இதேபோல பிஹாரும் முன்னேற வேண்டுமென்றால் பாஜகவை மக்கள் ஆட்சியில் அமர்த்த வேண்டும். பாஜகவால் மட்டுமே பிஹாருக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க முடியும்.

பிஹார் இளைஞர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனர். அந்த வகையில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், வயதான பெற்றோரை பரிதவிக்கவிட்டு தொலைதூரத்தில் பணியாற்றி வருகின்றனர். இதற்கு காரணமான அரசு மீண்டும் ஆட்சியில் அமரவேண்டுமா என்பதை மக்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும்" என்றார் மோடி.

இந்தப் பொதுக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோரும் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x