அனைத்து அரசு அலுவலகங்களிலும் தெர்மல் ஸ்கேனர்; காணொலிக் கூட்டங்கள்: மத்திய அரசு உத்தரவு

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தெர்மல் ஸ்கேனர்; காணொலிக் கூட்டங்கள்: மத்திய அரசு உத்தரவு
Updated on
1 min read

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் தெர்மல் ஸ்கேனர்களைப் பொருத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இதனை அதிகாரபூர்வமாக அதிகரித்துள்ளது.

இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 24 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 9 பேரும், கர்நாடகாவில் 8 பேரும், தெலங்கானாவில் 4 பேரும், லடாக்கில் 4 பேரும், ஜம்மு காஷ்மீரில் 3 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தவிர தமிழகம், ஆந்திரா, ஒடிசா, உத்தரகாண்ட், பஞ்சாப், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் உடல் வெப்பநிலையை அளவிடும் தெர்மல் ஸ்கேனர்களைப் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பணியாளர்கள் நல மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ''அனைத்து அரசு அலுவலகங்களிலும் உடல் வெப்பநிலையை அளவிடும் தெர்மல் ஸ்கேனர்களைப் பொருத்த வேண்டும். அனைத்துத் துறை அமைச்சகங்களின் அலுவலகங்களிலும் இவற்றைப் பொருத்த வேண்டியது அவசியமாகும்.

பார்வையாளர்கள் வருகைக்காக அனுமதிச் சீட்டு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் பார்வையாளர்கள் வருவதை முடிந்த அளவுக்கு ஊக்கப்படுத்த வேண்டாம்.

ஆலோசனைக் கூட்டங்களைக் காணொலி மூலமாக நடத்த வேண்டும். அதிக நபர்கள் கலந்துகொள்ளும்பட்சத்தில் கூட்டத்தைத் தள்ளிப்போடலாம். ஆவணங்களை நேரடியாக அனுப்புவதற்குப் பதில் மெயிலில் அனுப்ப வேண்டும். அதேபோல அரசு அலுவலகங்களில் உள்ள உடற்பயிற்சிக் கூடம், க்ரச் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் மூட வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in