Published : 17 Mar 2020 02:55 PM
Last Updated : 17 Mar 2020 02:55 PM

கரோனா முன்னெச்சரிக்கை; மும்பையில் மின்சார ரயில்கள் நிறுத்தம்? - உத்தவ் தாக்கரே பரிசீலனை

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில் சேவையை நிறுத்துவது குறித்து மகாராஷ்டிர அரசு பரிசீலித்து வருகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிர மாநிலத்தில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.

அங்கு 39 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் முதன்முறையாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில் சேவையை நிறுத்துவது குறித்து மகாராஷ்டிர அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியதாவது:

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிரா முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

‘‘இதன் ஒருபகுதியாக மும்பையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்டவற்றை சில நாட்கள் நிறுத்தி வைப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே இறுதி முடிவெடுப்பார்’’ எனக்கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x