Published : 17 Mar 2020 01:57 PM
Last Updated : 17 Mar 2020 01:57 PM

ம.பி. நம்பிக்கை வாக்கெடுப்பு: மாநில அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த வாரம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்பதவி விலகினர். இதனால் அக்கட்சியின் பலம் 114-ல் இருந்து 92 ஆககுறைந்தது. இதையடுத்து, முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் ம.பி. சட்டப்பேரவை நேற்று கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபுபடி ஆளுநர் லால்ஜி டாண்டன் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து அவை மார்ச் 26-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்து சபாநாயகர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதைத்தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பில்லை எனக் கூறி ம.பி. முதலவர் கமல்நாத் ஆளுநர் லால்ஜி டான்டனுக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக மத்திய பிரதேச அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் விசாரணையை நாளைக்கு (புதன் கிழமை) ஒத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான், ம.பி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x