

மகாராஷ்டிராவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுபவர்களை மற்றவர்கள் அடையாளம் கண்டு விலகி இருக்க ஏதுவாக கரோனா கண்காணிப்பில் இருப்பவர் என்ற முத்திரை கையில் குத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அடையாளம் காணும் வகையில் மகாராஷ்டிரா அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகள், நாடுகளில் இருந்து வரும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தப்படும் மக்களை மற்றவர்கள் அடையாளம் காணும் வகையில் அவர்களிது கையில் அதற்கான முத்திரை குத்தப்படுகிறது.
இதன்படி மும்பை நகரின் பல பகுதிகளிலும் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு முத்திரைகள் குத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் பற்றி விவரத்தை தெரிந்த அவர்களிடம் இருந்து விலகி இருக்க முடியும். கரோனா வைரஸ் பாதித்து கண்காணிப்பில் இருப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர அரசு எச்சரித்துள்ளது.
கரோனா பாதிப்பு என்பது குற்றச்செயல் அல்ல, ஆனால் மற்றவர்களுக்கும் இது பரவாமல் தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என மகாராஷ்டிர அரசு விளக்கம் அளித்துள்ளது.