Last Updated : 16 Mar, 2020 06:22 PM

 

Published : 16 Mar 2020 06:22 PM
Last Updated : 16 Mar 2020 06:22 PM

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 114 ஆக அதிகரிப்பு: ஒடிசாவில் முதல் நபர் பாதிப்பு

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 114 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் முதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் படிப்படியாக நுழைந்த கரோனா வைரஸுக்கு இதுவரை 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கேரளா, லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இன்று புதிதாக தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் 4 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் அந்தக் கணக்கை மத்திய சுதாகாரத்துறை அமைச்சகம் எடுக்கவில்லை. அதையும் கணக்கில் எடுக்கும்போது, 118 ஆக அதிகரிக்கும்.

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட 114 பேரில் 17 பேர் வெளிநாட்டவர்கள். 13 பேர் ஏற்கெனவே குணமடைந்து சென்றுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று மட்டும் 4 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, 37 பேராக அதிகரித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில்தான் இதுவரை எந்த நபரும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகாமல் இருந்து வந்தனர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு இத்தாலியிலிருந்து இந்தியா திரும்பிய ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரைச் சேர்ந்த அந்த ஆய்வாளர் கடந்த 12-ம் தேதி டெல்லி வந்தார். அங்கிருந்து ரயிலில் புவனேஷ்வர் வந்துள்ளார். சில நாட்களில் அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அந்த ஆய்வாளருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புவனேஷ்வர் அரசு மருத்துவமனையில் அந்த ஆய்வாளார் தனி வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இதுகுறித்து ஒடிசா மாநில செய்தித் தொடர்பாளர் சுப்ரோதோ பாக்சி நிருபர்களிடம் கூறுகையில், "புவனேஷ்வரைச் சேர்ந்த அந்த ஆய்வாளரின் உடல்நிலை சீராக இருக்கிறது. கடந்த 12-ம் தேதி டெல்லியிலிருந்து திரும்பிய அந்த ஆய்வாளர், மருத்துவரிடம் உடல் நிலையைப் பரிசோதித்துள்ளார்.

அப்போது, அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளார். ரயிலில் வந்தபோது யாருடன் பேசினார், எந்தப் பெட்டியில் பயணித்தார், அவருடன் பயணித்தவர் யார் போன்ற விவரங்களைச் சேகரித்து வருகிறோம். அந்த ஆய்வாளரின் குடும்பத்தினரின் உடல்நிலையையும் கண்காணித்து வருகிறோம். அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x