Last Updated : 16 Mar, 2020 12:58 PM

 

Published : 16 Mar 2020 12:58 PM
Last Updated : 16 Mar 2020 12:58 PM

ராஜஸ்தானில் கரோனா வைரஸிலிருந்து மீண்ட 3 முதியவர்கள்; விவரம் என்ன, பயன்படுத்திய மருத்துவம் என்ன? மருத்துவர்களுக்கு முதல்வர் பாராட்டு

பிரதிநிதித்துவப்படம்

ஜெய்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகளை பல்வேறு மருந்துகள் கொண்ட கலவை மருந்துகளால் மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

மருத்துவர்களின் செயலைப் பாராட்டி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்புக்கு 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 3 பேரை அங்குள்ள மருத்துவர்கள் சில கலவை மருத்துகளை அளித்துக் குணப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 402 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 393 பேருக்கு கரோனா இல்லை என்பது தெரியவந்தது. 5 மாதிரி முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இத்தாலியிலிருந்து திரும்பிய 69 வயது முதியவர், துபாயிலிருந்து திரும்பிய 85 வயது மூதாட்டி ஆகியோர் கரோனா வைரஸ் பாதிப்பால் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்து சென்றனர். இவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது.

இதற்கு முன் இத்தாலியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் காரணமாக அவரும் கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து சென்றனர்.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், "இதுவரை 3 பேர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி, மருத்துவர்களின் சிகிச்சையால் குணமடைந்து சென்றனர். இவர்கள் 3 பேரும் முதியவர்கள். முதியவர்களை கரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து அதிகம் இருக்கும்போது, மருத்துவர்களின் சிகிச்சையால் அவர்கள் குணமடைந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்: கோப்புப் படம்.

இதுகுறித்து சவாய் மான்சிங் மருத்துவமனை மருத்துவர்கள் தரப்பில் கூறுகையில், "வெற்றிகரமாக கரோனா வைரஸ் நோயாளிகள் 5 பேரைக் குணப்படுத்தியுள்ளோம். இதற்கு எச்ஐவி, மலேரியா, ஸ்வைன் ப்ளூ மருந்துகளைக் கலவையாகப் பயன்படுத்திக் குணப்படுத்தியுள்ளோம். அதாவது லோபினாவிர், ரிடோனாவிர் ஆகிய இரு மருந்துகளைக் கலவையாகப் பயன்படுத்திக் குணப்படுத்தியுள்ளோம்.

நாங்கள் பயன்படுத்திய மருந்துகளை இந்திய மருத்துவக் கவுன்சிலான ஐசிஎம்ஆர் அமைப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது. மருத்துவக் கவுன்சில் விதிமுறைப்படிதான் எங்கள் சிகிச்சை முறை இருந்தது. வெற்றிகரமாக இதைச் செய்துள்ளோம்" எனத் தெரிவித்தனர்.

மருத்துவர்களின் சாதனையை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பாராட்டியுள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், "சவாய் மான்சிங் மருத்துவமனையில் 2 முதியவர்கள் உள்பட 3 கரோனா நோயாளிகளை சவாய் மான்சிங் மருத்துவமனை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. வெற்றிகரமாக கரோனா நோயாளிகளை ஜெய்ப்பூர் மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

இந்தச் செய்தி மன உளைச்சலில் இருக்கும் பலருக்கும் நிம்மதியளிக்கும். மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். இந்தச் செய்தி அனைவருக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும்" என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x