Published : 16 Mar 2020 07:57 AM
Last Updated : 16 Mar 2020 07:57 AM

கோவிட்-19 வைரஸ் பாதிப்பு எதிரொலி: ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைப்பு

கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக ஆந்திராவில் வரும் 21-ம் தேதி முதல் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இத்தாலியில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு வந்த பொறியாளர் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திராவில் 21 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோவிட்-19 வைரஸ் அறிகுறியுடன் 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 57 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர அரசின் ஆரோக்கிய  இலவச மருத்துவ திட்டத்தின் கீழ், கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டுமென தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10-ம் தேதிக்கு பிறகு குண்டூர் மாவட்டத்துக்கு மொத்தம் 476 வெளிநாட்டு பயணிகள் வந்தது தெரியவந்துள்ளது. தெனாலி, குண்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள அவர்கள் அனைவருக்கும் மேலும் 14 நாட்கள் வரை அந்தந்த அரசுமருத்துவமனைகளில், பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, வரும் 21-ம்தேதி முதல் நடைபெற இருந்தபஞ்சாயத்து மற்றும் நகராட்சி மன்றதேர்தல்கள் 6 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் சனிக்கிழமை இரவு அறிவித்தது.

இந்த தேர்தலில் மனு தாக்கல் செய்வதில் ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்ததாக எதிர்க்கட்சியினர் புகார் செய்திருந்த நிலையில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா மாநிலத்தில் ஜெகத்தியாலா பகுதியைச் சேர்ந்தஒருவர் துபாயில் இருந்து திரும்பிவந்தபோது, அவருக்கு கோவிட்-19வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இவர் கடந்த 12 நாட்களாக செகந்திராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது அவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் இத்தாலியில் இருந்து ஹைதராபாத் வந்த பொறியாளர் ஒருவருக்கு கோவிட்-19வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவிட்-19 வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க திரையரங்குகள், பார்கள், பள்ளிகளை வரும் 31-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸை எதிர்கொள்ள தெலங்கானா அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x