

தொடர முடியாத மற்றும் காலாவதியான அஞ்சலக ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு பாலிசிதாரர்கள் முதல் முறையாக பிரீமியம் செலுத்தாத நாளிலிருந்து தொடர்ந்து ஐந்தாண்டு காலத்திற்குப் பிரீமியம் செலுத்தப்படாமல் தொடர்ச்சியற்ற / காலாவதியான பாலிசிகள் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு விதிகளின்படி 01.04.2020 அன்று அல்லது அதற்குப் பிறகு புதுப்பித்துக் கொள்ளும் தகுதி உள்ளவை அல்ல.
இருப்பினும், கடைசி பிரீமியம் செலுத்துவதற்கான தேதியிலிருந்து ஐந்தாண்டுகள் என்ற வரம்பைக் கடந்திருந்தால் அத்தகைய பாலிசிகளை ஒருமுறை வாய்ப்பாக 31.03.2020 வரை புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கு நல்ல ஆரோக்கியத்திற்கான மருத்துவ சான்றிதழ் அளிக்க வேண்டியது அவசியமாகும். இத்தகைய பாலிசிகளை வைத்திருந்து காப்பீட்டுப் பயன்களைப் பெற விரும்பும் பாலிசிதாரர்கள் அருகில் உள்ள எந்த அஞ்சலகத்திலும் எழுத்துப் பூர்வமாக விண்ணப்பிக்கலாம்.
இந்த தேதிக்குப் பிறகு அதாவது 31.03.2020-க்கு பிறகு இத்தகைய பாலிசிகள் புதுப்பிக்கப்படமாட்டாது. இவ்வாறு காலாவதியான பாலிசிகள் விதிகளின்படி ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும் என்று சென்னை தலைமை அஞ்சலக தலைமை போஸ்ட் மாஸ்டர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.