

பரூக் அப்துல்லா இத்தனை காலம் தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணம் தான் தெரியவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட 370-வது பிரிவை நீக்கி, சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற்றது மத்திய அரசு.
இந்த நடவடிக்கை எடுக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது காஷ்மீர் நிர்வாகம். அதன்பின் இவர்கள் 3 பேரும், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.
ஏறக்குறைய 7 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை இன்று விடுவிக்க காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதன்மைச் செயலாளர் ஷலீன் காப்ரா பிறப்பித்த உத்தரவில், "செப்டம்பர் 15-ம் தேதி பரூக் அப்துல்லா பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது திரும்பப் பெறப்படுகிறது. அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிடப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டாலும் மீதமுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் பரூக் அப்துல்லாவை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசினார்.
பின்னர் குலாம் நபி ஆசாத் கூறுகையில் ‘‘இது எனக்கு மிக மகிழ்ச்சி. தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவை சந்தித்து பேசினேன். 7 மாதங்களாக அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் எங்களால் பார்க்க முடியவில்லை. அவர் தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணம் தான் தெரியவில்லை’’ எனக் கூறினார்.