Published : 14 Mar 2020 08:56 AM
Last Updated : 14 Mar 2020 08:56 AM

கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆக உயர்வு; 8 மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை

கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீர், கேரளா, டெல்லியில் சில நாட்களுக்கு முன்பே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் மேலும் 8 மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் தயார் நிலை

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் நேற்று கூறும்போது, "மாநிலத்தில் வரும் 22-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ சவாலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் " என்று தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுமுறை விடப்படுகிறது. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடக்கும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் மால்கள் மூடல்

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பையில் நேற்று கூறும்போது, "வரும் 31-ம் தேதி வரைபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைவிடப்படுகிறது. 10, 12-ம் வகுப்புபொதுத்தேர்வுகள் மட்டுமே நடைபெறும். மும்பை, தாணே, நாக்பூரில் மால்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்படும்" என்று தெரிவித்தார்.

பஞ்சாப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா, சண்டிகரில் நேற்று கூறும்போது, "பஞ்சாபில் ஒருவருக்கு மட்டுமே கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது" என்று தெரிவித்தார்.

ஹரியாணா அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், "சோனிபட், ரோட்டக், ஜாஜர், பரிதாபாத், குருகிராம் ஆகிய 5 மாவட்டங்களில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஹாரில் கட்டுப்பாடு

பிஹார் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், "வரும் 31-ம்தேதி வரை மாநிலம் முழுவதும்பள்ளி, கல்லூரிகள் செயல்படாது. பூங்காக்கள், வனவிலங்கு உயிரியல் பூங்காக்களும் மூடப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும்31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மால்கள், திரையரங்குகள், மதுபான விடுதிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அனைத்து மால்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் வரும் 31-ம் தேதி வரை மூடப்படும் என்று யூனியன் பிரதேச அரசு நேற்று அறிவித்தது.

உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும். வழக்கில் தொடர்பில்லாத வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சில கட்டுப்பாடுகளும் உச்சநீதிமன்ற வளாகத்தில் அமல்செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கோடைகாலத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை விடப்படும். அப்போது குறிப்பிட்ட அமர்வுகள் மட்டுமே வழக்குகளை விசாரிக்கும். தற்போதைய சூழ்நிலையில் கோடைகால விடுமுறை போன்றே உச்ச நீதிமன்றம் செயல்படும் என்று பதிவாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை 85 பேருக்கு பாதிப்பு

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கோவிட்-19 வைரஸ்காய்ச்சலால் பாதிக்கப்பட் டோரின்எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17 பேர் வெளிநாட்டினர். 68 பேர் இந்தியர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மேலும் 3 பேருக்கு கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அந்த மாநிலத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. உலகளாவிய அளவில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,096 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x