Published : 12 Mar 2020 08:33 PM
Last Updated : 12 Mar 2020 08:33 PM
நீதிபதி முரளிதர ராவ்-ஐ அவசரம் அவசரமாக டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்த அரசின் முடிவுக்குக் கவலை தெரிவித்து சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கம் [“The International Bar Association’s Human Rights Institute (IBAHRI)] ஒன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
வடகிழக்கு டெல்லியில் கலவரங்கள் நடைபெற்றதையடுத்து துவேஷப் பேச்சு பேசியதாக 3 பாஜக தலைவர்கள் மீது ஏன் எஃப்.ஐ.ஆர் போடவில்லை என்று கேள்வி எழுப்பினார் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர ராவ். பிப்.26ம் தேதியான அன்று இவரை பஞ்சாப்-ஹரியாணா கோர்ட்டுக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
“சர்வதேச பார் அசோசியேஷனின் மனித உரிமைகள் நிறுவனம் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திற்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது. அதில் நீதிபதி எஸ். முரளிதர் அவசரமாக பணியிட மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.” என்று அந்த பார் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
“வழக்கத்துக்கு மாறான இந்த பணியிட மாற்றம் அதுவும் சமூக அமைதி குலைந்த நேரத்தில் செய்யப்பட்டிருப்பது இந்தியாவில் நீதித்துறையின் தனித்தன்மை குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. அரசை பொறுப்பேற்கச் செய்ய நீதித்துறைக்கு உரிமை இருப்பது என்பது சட்டத்தின் அடிப்படையாகும். நீதிபதி ஒருவர் தன் சுதந்திரக் குரலை பயன்படுத்துவது குறித்த அச்சுறுத்தல் இருக்கக் கூடாது” என்று பார் அமைப்பின் கடிதம் கூறுகிறது.
இந்த அமைப்பு மனித உரிமைகளைக் காப்பதற்கும் உலகம் முழுதும் சட்டத்துறையின் தனித்துவத்தையும் வலியுறுத்தும் அமைப்பு என்று அதே கடிதத்தில் இந்த பார் அமைப்பு கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT