Published : 12 Mar 2020 04:25 PM
Last Updated : 12 Mar 2020 04:25 PM

டெல்லி கலவரம்; வன்முறையாளர்களுக்கு உதவிய காவல்துறை: கபில் சிபல் குற்றச்சாட்டு

டெல்லி கலவரத்தின்போது வன்முறையை தூண்டியவர்களுக்கு போலீஸாரே உதவியுள்ளனர் என மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபில் குற்றம்சாட்டினார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன் டெல்லி வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் வகுப்புக் கலவரமாக மாறியது.

இந்தக் கலவரத்தில் ஏராளமான வீடுகள், கடைகள், பேருந்துகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைத்து எரிக்கப்பட்டன. நாட்டையே உலுக்கிய இந்தக் கலவரத்தில் இதில் 53 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த டெல்லி கலவரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும், உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சிகள் கடந்த வாரம் மக்களவையில் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டு நேற்று கூடியது. ஏற்கெனவே பல்வேறு கட்சிகள் விவாதம் நடத்த வேண்டும் என்று நோட்டீஸ் அளித்திருந்ததால், மக்களவை விதி 193-ன் கீழ் இந்த விவாதம் நடத்தப்பட்டது. ஆதலால், விவாதத்துக்குப் பின், வாக்கெடுப்பு ஏதும் நடத்தப்படவில்லை.

மாநிலங்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் மாநிலங்களவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபில் பேசியதாவது:
‘‘டெல்லி கலவரத்தின்போது வன்முறையை தூண்டியவர்களுக்கு போலீஸாரே உதவியுள்ளனர். இதன் காரணமாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். கலவரத்துடன் எந்த தொடர்பும் இல்லாத மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x