Published : 11 Mar 2020 08:16 AM
Last Updated : 11 Mar 2020 08:16 AM

பாஜக.வில் கோலோச்சும் சிந்தியா குடும்பத்தினர்

ஜன் சங்கம் தொடங்கியது முதல் இன்று வரை சிந்தியா குடும்பத்தினர் பாஜகவில் தொடர்ந்து பல்வேறு பதவிகளை வகித்து கோலோச்சி வருகின்றனர்.

மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனக்கு முதல்வர் பதவியோ, துணை முதல்வர் பதவியோ தராத வருத்தத்தில் இருந்த, ஜோதிராதித்ய சிந்தியா, கட்சித் தலைமை மீது கடந்த சில மாதங்களாக கடும் அதிருப்தி கொண்டிருந்தார்.

இதனிடையே நேற்று பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துள்ளார். இதனால் விரைவில் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜகதலைமையிலான ஆட்சி அங்குஅமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் தாய்க்கழகமான பாஜகவுக்கு, ஜோதிராதித்ய சிந்தியா வருவார் என அவரதுஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆம். அவரது பாட்டி விஜயராஜே சிந்தியாவின் கனவும் அதுதான் என்கிறார்கள் விவரமறிந்த வர்கள். குவாலியர் அரச வம்சத்தின் ராஜமாதாவாக இருந்தவர் விஜயராஜே சிந்தியா.

1970-களில் ஜன சங்கம், பாஜக தோற்றுவிக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தார்.

ஜன சங்கம் நிறுவப்பட்டபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அலையையும் எதிர்த்து மத்திய பிரதேசத்தில் 3 மக்களவைத் தொகுதிகளில் ஜனசங்கம் வெற்றி கண்டது.

ஆனால் 1980-ல் பாஜகவில் இருந்து விலகிய, மாதவராவ் சிந்தியா, காங்கிரஸில் இணைந்து எம்.பி.யானார். பின்னர் உடனடியாக மத்திய அமைச்சரவையிலும் சேர்க்கப்பட்டார்.

அதே நேரத்தில் விஜயராஜே சிந்தியாவின் மகள்கள் வசுந்தரா ராஜே, யசோதரா ராஜே ஆகியோர் அரசியலில் நுழைந்தனர். இதில் வசுந்தரா, பாஜகவின் தேசிய செயற்குழுவில் இணைந்தார். பின்னர் 2 முறை ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்தார்.

தற்போது வசுந்தராவின் மகன் துஷ்யந்த், ஜலவார் தொகுதி பாஜக எம்.பியாக உள்ளார்.

அதே நேரத்தில் யசோதரா ராஜே, 1998 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டார் யசோதரா.

பின்னர், எம்எல்ஏவாகவும் தேர்வு செய்யப்பட்டு, சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையிலும் அவர் இடம்பிடித்தார்.

விஜயராஜே சிந்தியாவின் 2 மகள்கள் பாஜக பக்கமும், மகன் காங்கிரஸ் பக்கமும் இருந்தனர். 2001-ல் இறக்கும் தருவாயிலும் கூட மகன் மாதவராவ் சிந்தியாவும், பேரன் ஜோதிராதித்ய சிந்தியாவும் பாஜக பக்கம் வரவேண்டும் என்று விஜயராஜே சிந்தியா விரும்பினார். ஆனால் அவர் இறக்கும் வரை அது நடக்கவில்லை.

இதனிடையே மாதவராவ் சிந்தியா, 2001-ம் ஆண்டு செப்டம்பரில் விமான விபத்தில் உயிரிழந்தார். அதே நேரத்தில் அவரது மகன்ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸில் இணைந்து எம்.பி.யாகி மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால் 2019 மக்களவை தேர்தலில், ஜோதிராதித்யா, குணாதொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.

இதனிடையே மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அப்போது தனக்கு முதல்வர் பதவியோ அல்லது துணை முதல்வர் பதவியோ கிடைக்கும் என ஜோதிராதித்யா எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை.

இந்நிலையில்தான் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அவர் கட்சி எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதனால் கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில், முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை, ஜோதிராதித்யா சந்தித்துப் பேசினார். அப்போதே அவர் பாஜக பக்கம் தாவுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் விஜயராஜே சிந்தியாவின் கனவுப்படி அவர் பாஜகவில் இணைவார் என அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x