Published : 11 Mar 2020 08:14 AM
Last Updated : 11 Mar 2020 08:14 AM

பிரதமர் மோடி தேர்ந்தெடுத்த 7 பெண் சாதனையாளர்கள்

புதுடெல்லி

இந்திய அளவில் பெண்கள் பலர் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் சாதனைகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியிருந்தார். மேலும், சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, ‘ஷி இன்ஸ்பயர்ஸ் அஸ்’ என்ற ஹேஷ்டேக்கையும் பிரதமர் வெளியிட்டிருந்தார்.

அதன்பின், பெண்கள் பலரும் தங்கள் சாதனைகளை பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கில் பகிர்ந்தனர். அவர்களில் 7 சாதனைப்பெண்களை தேர்ந்தெடுத்து, சர்வ தேச பெண்கள் தினத்தன்று (கடந்த 8-ம் தேதி ஒரு நாள்) தனது சமூகவலைதள கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை அவர்களிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.

அவர்கள் 7 பேரும் இயற்கை விவசாயம் முதல் பட்டினி ஒழிப்பு வரை பல்வேறு துறைகளில் இந்த சமூகத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இதுகுறித்து தங்கள் அனுபவங்களைப் பிரதமரின் ட்விட்டர் கணக்கில் இருந்து பகிர்ந்தனர்.

அவர்கள் விவரம்:

ஆரிபா ஜன்: காஷ்மீரைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்தின் ‘நம்தா’ கைவினைக் கலைகளை மீட்டெடுத்து பிரபலப்படுத்தி வருகிறார். உள்ளூர் பெண்களின் வருவாய்க்காக இந்த கைவினைப் பொருட்கள் உற்பத்திக்கு உதவிகள் செய்து வருகிறார்.

கலாவதி தேவி: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி. திறந்தவெளி கழிப்பிட பிரச்சினையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். அதற்காக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி ஏழைகளுக்குக் கழிப்பறை கட்டித் தந்துள்ளார். இதுவரை கான்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் கழிவறைகளை கட்டியுள்ளார். உள்ளூர் மக்களிடம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

விஜயா பவார்: மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜயா பவார். இங்குள்ள கிராமங்களில் பஞ்சாரா சமூகத்தினரின் கைவினைப் பொருட்களை மேம்படுத்த உழைத்து வருகிறார். இந்தியாவில் பல்வேறு கைவினைப் பொருட்கள் இருந்தாலும், பஞ்சாரா மக்களின் கைவினைப் பொருட்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றின் உற்பத்தி, விற்பனைக்கு கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

மாளவிகா ஐயர்: தமிழகத்தைச் சேர்ந்தவர் மாளவிகா ஐயர். ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் பகுதியில் வசித்தவர். அப்போது, தனது 13-வது வயதில் விளை யாடும்போது குப்பையில் கிடந்த மர்ம பொருள் வெடித்து தனது 2 கைகளையும் இழந்தவர். கால்களும் பாதிக்கப்பட்டன. எனினும், மன உறுதியுடன் படித்து முனைவர் பட்டம் பெற்றவர். சமூக சேவகர், மனித உரிமை போராளி, மாடல் என பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொண்டவர்.

சினேகா மோகன்தாஸ்: தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த சினேகா, ‘புட்பேங்க் இண்டியா’ அமைப்பை உருவாக்கி, ஏழைகளுக்கு இலவசமாக உணவுகள் வழங்கி வருகிறார். ‘பட்டினி இல்லாத தேசம்’ என்ற நோக்கத்துடன் இந்த அமைப்பை இவர் நடத்தி வருகிறார்.

கல்பனா ரமேஷ்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்தவர் கல்பனா ரமேஷ். கட்டிட கலைஞர். தண்ணீரை எப்படி எல்லாம் சேகரிக்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

பினா தேவி: பிஹார் மாநிலத்தின் முங்கர் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி. இவருக்கு சொந்தமாக நிலம் இல்லை. வீட்டிலும் இடம் இல்லை. எனினும், கடந்த 2013-ம் ஆண்டு முதல் தனது கட்டிலுக்கு அடியில் இயற்கை முறையில் காளான் வளர்த்து சாதித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x