

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கோவிட் -19 வைரஸ் உருவபொம்மையை எரித்து ஹோலி பண்டிகையை மக்கள் கொண்டாடினர்.
கோவிட் - 19 வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் சிலர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவிட் - 19 வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அந்த வைரஸை வெற்றிகரமாக அழிப்போம் என்பதை உணர்த்தும் வகையிலும் மகாராஷ்டிரா மக்கள் வைரஸ் உருவபொம்மையை எரித்தனர். ஹோலிப் பண்டிகை வட மாநிலங்களில் முழு உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது.
ஹோலிப் பண்டிகையின்போது தீமையை ஒழிப்பதை குறிக்கும் வகையில் கொடிய அசுரர்களின் உருவபொம்மைகளை மக்கள் எரிப்பது வழக்கம். அதன்படி, கோவிட் - 19 வைரஸை அசுரனாக பாவித்து, ‘கோவிட் - 19 அசுரன்’ என்று எழுதப்பட்ட கொடும்பாவிகளை மும்பையின் ஒர்லி பகுதி மக்கள் எரித்தனர். வேறு சில இடங்களிலும் இதேபோன்ற உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளின் உருவபொம்மைகளையும் பெண்கள் எரித்தனர். ‘பெண் களுக்கு எதிரான கொடுமைகள் ஒழியட்டும்’ என்று அவர்கள் கோஷ மிட்டனர்.