Last Updated : 10 Mar, 2020 01:50 PM

 

Published : 10 Mar 2020 01:50 PM
Last Updated : 10 Mar 2020 01:50 PM

சிஏஏ எதிர்ப்பாளர்கள் குறித்த பேனரை அகற்ற உ.பி அரசு மறுப்பு: உயர் நீதிமன்றத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல முடிவு

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பொதுச்சொத்துகளுக்குச் சேதாரம் செய்தவர்கள் பெயர், புகைப்படம், தர வேண்டிய தொகை ஆகியவற்றைப் பேனர் வைத்து அவமானப்படுத்தியதற்கு உயர் நீதிமன்றம் முதல்வர் யோகி் ஆதித்யநாத் அரசைக் கடுமையாகக் கண்டித்தது.

உடனடியாக அந்த பதாகைகளை அகற்ற வேண்டும், இதுபோன்று பதாகைகள் வைத்து அவமானப்படுத்தச் சட்டத்தில் இடமில்லை என்று கண்டித்தது. ஆனால், பதாகைகளை அகற்ற மறுத்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறது.

இந்த வார இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் உ.பி அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு நகரங்களில் போராட்டம் வெடித்தது, அந்த போராட்டம் சில இடங்களில் கலவரமாக மாறி கல்வீச்சு, தீவைப்பு, பஸ்கள் சேதம் என பல சம்பவங்கள் நடந்தன. இந்த கலவரத்தில் 22 பேர் பலியானார்கள் இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அடையாளம் கண்ட உ.பி. போலீஸால் 57 பேரின் புகைப்படங்கள், முகவரி ஆகியவற்றை வெளியிட்டு அவர்கள் செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றை குறிப்பிட்டு பேனர் வைத்து அவமானப்படுத்தியது.

இந்தபேனரை மாநிலத்தில் பல நகரங்களில் இதுபோன்று வைத்து அந்த பேனர் வைக்கப்பட்டதால் அந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் பெரும் வேதனைக்கு ஆளாகினார்கள்.

உத்தரபிரதேசத்தில் வைக்கப்பட்ட பதாகைகள்

இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து வழக்காக அலகாபாத் நீதிமன்றம் எடுத்து விசாரித்தது. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்துர், நீதிபதி ரமேஷ் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், " உத்தரப் பிரதேச மாநிலத்தில் லட்சக்கணக்கானோர் சிறையில் இதே காரணங்களுக்காக அடைக்கப்பட்டிருக்கும் போது குறிப்பாக இவர்களை மட்டும் புகைப்படம் முகவரி வெளியிட்டு பொது இடங்களில் வைக்க வேண்டிய அவசியம் என்ன, இது அவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகும்.

இதுபோன்று பேனர்கள் வைக்கலாம் என்று எந்தச் சட்டத்திலும் கூறப்படவில்லை. பேனர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இந்த பேனர் வைக்கப்பட்டதற்கான விளக்கத்தை சொலிசிட்டர் ஜெனரல் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்

இந்நிலையில், முதல்வர் ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் ஷலாப் மணி திரிபாதி கூறுகையில், " அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். எந்த அடிப்படையில் நாங்கள் அந்த பேனர்களை அகற்ற வேண்டும் என சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து வருகிறோம். எங்களுக்கு எந்த வாய்ப்பு இருக்கிறதோ அந்த வாய்ப்பைத் தேடிச் செல்வோம். இதுகுறித்து முதல்வர் முடிவு செய்வார். உண்மை என்னவென்றால், பொதுச்சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தியவர்கள் யாரும் தப்பிக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

உ.பி. அரசின் மற்றொரு ஆலோசகர் மிருதுன்ஜே குமார் கூறுகையில், " உ.பி. அரசு வைத்துள்ள பதாகைகளை அகற்ற வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் புரிந்து கொள்கிறோம். சுவரொட்டிகள் வேண்டுமானால் அகற்றப்படலாம் ஆனால் வழக்குகள் வாபஸ் பெறப்படாது" எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x