Last Updated : 09 Mar, 2020 06:29 PM

 

Published : 09 Mar 2020 06:29 PM
Last Updated : 09 Mar 2020 06:29 PM

யோகி ஆதித்யநாத் தலைமை உ.பி.அரசுக்கு ஒன்றும் தெரியவில்லை: அகிலேஷ் யாதவ் சாடல்

லக்னோ

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம்சாட்டி 57 பேர் முகவரி, புகைப்படம் அடங்கிய பேனர்களை ஆங்காங்கே லக்னோவில் வைத்த விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் பேனர்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டதை பல எதிர்க்கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறும்போது, “குடிமக்களின் அந்தரங்கத்திற்கான உரிமை பற்றியும் யோகி அரசுக்கு ஒன்றும் தெரியவில்லை நாட்டின் அரசியல் சாசனமும் தெரியவில்லை, அதன் மீதான மரியாதையும் இவர்களுக்கு இல்லை.. இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டியுள்ளது, இதனை வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.

அதே போல் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ளார்.

அலகாபாத் உயர் நீதிமன்றம், “உ.பி.யில் லட்சக்கணக்கானோர் இதே குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கும் போது குறிப்பிட்ட சிலரை மட்டும் போஸ்டர் அடித்து வெளிப்படுத்துவது ஏன் என்ற கேள்வியை எழுப்பி மனிதர்களின் அந்தரங்க உரிமை மீறப்பட்டுள்ளதாக போஸ்டர்களை உடனடியாக அகற்றவும் லக்னோ மேஜிஸ்ட்ரேட் இது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகளை மார்ச் 16ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் குமார் லல்லு, “அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமை, ஆனால் இந்த அரசுக்கு அது தெரியவில்லை, புறக்கணித்தது. அதனால்தான் போஸ்டர் அடித்து ஜனநாயக விரோதச் செயலை செய்துள்ளது.

போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை நிரூபிக்கப்படவேயில்லை. நீதிமன்றம்தான் இவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் சமூக செயல்பாட்டாளரும் அரசியல்வாதியுமான சதாஃப் ஜாஃபர் மற்றும் இந்தப் பட்டியலில் போஸ்டரில் இடம்பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரியும் அலகாபாத் கோர்ட் முடிவை வரவேற்றுள்ளனர்.

சதாஃப் ஜாபர் கூறும்போது, “எங்களது அடையாளங்கள், முகவரிகள், சுயவிவரங்கள் மக்களின் உள்பெட்டிகளில் உள்ளன. எங்களுக்கு ஏற்கெனவே சேதம் ஏற்படுத்தப்பட்டு விட்டது. எங்கள் உயிருக்கு இருக்கும் ஆபத்து இன்னும் விலகிவிடவில்லை. ஆனால் இந்த கோர்ட் உத்தரவு எதிர்காலத்துக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. ஆகவே மற்றவர்களுக்கும் அவர்கள் இதை நினைத்துப் பார்க்க மாட்டார்கள். ஆகவே இந்த உத்தரவை மைல்கல் உத்தரவாக வரவேற்கிறேன்” என்றார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி கூறும்போது, “உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம்தான் ஆள்கிறது என்பதை நினைவூட்டும் தீர்ப்பாகும் இது. யோகி ஆதித்யநாத்தின் அராஜக் ஆட்சியல்ல என்பதை இந்த உத்தரவு வலியுறுத்தியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இது ஜனநாயகத்தின் வெற்றி, எதேச்சதிகாரத்தின் தோல்வி” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x