சென்னை உட்பட நாடு முழுவதிலும் ரயில்வே துறை அச்சகங்கள் மூடும் முடிவு ஜுன் 30 வரை தற்காலிகமாக ஒத்திவைப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை உட்பட நாடு முழுவதிலும் ரயில்வே துறை அச்சகங்கள் மூடும் முடிவு ஜுன் 30 வரை தற்காலிகமாக ஒத்திவைப்பு

நாடு முழுவதிலும் மத்திய ரயில்வே துறை சார்பிலான பல்வேறு வகை அச்சுப்பணிக்காக 14 அச்சகங்கள் செயல்பட்டு வந்தன. இவற்றை கடந்த 2009 ஆம் ஆண்டில் படிப்படியாக மூட முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, 19 அச்சகங்கள் மூடப்பட்டு தற்போது 5 மட்டும் செயல்பட்டு வருகின்றன. மீதியுள்ள இந்த 5 அச்சகங்களும் லாபகரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால், 2014 இல் மத்தியில் பதவி ஏற்ற புதிய அரசில் சுமார் அறுபது கோடி ரூபாய் மதிப்பிலான நவீனவகை இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

இத்துடன், அந்த அச்சகங்களின் கட்டிடங்களும் பல கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டன. இவற்றில், டெல்லியின் சகூர்பத்தி, சென்னை ராயபுரம், மகராஷ்டிராவின் மும்பை, மேற்கு வங்கத்தின் ஹவ்ரா மற்றும் ஆந்திராவின் செகந்திராபாத் ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், மீண்டும் 2017 ஆம் ஆண்டில் மீதியுள்ள ஐந்து அச்சகங்களையும் மூடிவிட முடிவு செய்யப்பட்டது. இதற்கு ரயில்வே தொழிலாளர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இதன் காரணமாக, அப்போது கைவிடப்பட்ட முடிவை மத்திய அரசு மீண்டும் கையில் எடுத்திருந்தது. இதில், மார்ச் 31 ஆம் தேதியுடன் ஐந்து அச்சகங்களும் மூடப்படும் என கடந்த ஜனவரியில் உத்தரவையும் வெளியிட்டிருந்தது.

இது குறித்து மத்திய ரயில்வே வாரியத்துடன் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. இதில் தற்காலிகமாக ஏற்பட்ட சமரசம் காரணமாக ஜூன் 30 ஆம் தேதி வரை மூடல் முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் கூட்டமைப்பின் செயல் தலைவர் என்.கண்ணையா கூறும்போது, ‘சென்னையின் அச்சகத்தில் மட்டும் சமீபத்தில் ரூ.40 கோடிக்கான நவீன இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

இதன் பலனாக ரயில் துறையுடன், தனியார் நிறுவனங்கள் அச்சுப்பணிகளும் லாபகரமாக செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் அதன் தொழிலாளர்களும் வேலை இழப்பதை ஏற்க முடியாது. வாரியத்துடன் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அரசு முடிவை மாற்றுவோம்.’’ எனத் தெரிவித்தார்.

இதுபோல், கோயம்புத்தூரில் இருந்த மத்திய அரசின் அச்சகம் உள்ளிட்ட சில 2017 இல் மூடப்பட்டன. இதேபோல், ரயில் துறையின் அச்சகங்களும் மூடப்பட அவை அமைந்த நிலப்பகுதிகள் காரணமாகக் கருதப்படுகிறது.

சென்னையின் துறைமுகத்திற்கு எதிரில் அமைந்துள்ள தென்னிந்திய ரயில்வேயின் அச்சகம் சுமார் இரண்டரை ஏக்கர் அளவில் அமைந்துள்ளது. நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிலத்தின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in