Last Updated : 09 Mar, 2020 03:33 PM

 

Published : 09 Mar 2020 03:33 PM
Last Updated : 09 Mar 2020 03:33 PM

சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படம், முகவரி குறித்த பேனர்களை அகற்றுக: யோகி அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிஏஏ என்கிற குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 57 நபர்களின் பெயர், முகவரி, உள்ளிட்டவற்றை புகைப்படங்களுடன் பேனர்களை உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் பல இடங்களிலும் வைக்கப்பட்டதை அலகாபாத் உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்து உடனடியாக அந்த பேனர்களை அகற்ற வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அலகாபாது உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்துர் மற்றும் நீதிபதி ரமேஷ் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு தன் உத்தரவில் கூறும்போது, “ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் உத்தரப் பிரதேச அரசின் இத்தகைய செயல் பொதுநல மனுதாரர் எழுப்புவது போல் கண்டிக்கத்தக்க செயல், மக்களின் அந்தரங்கத்தில் எந்த ஒரு அவசியமுமற்ற தலையீடாகும். மேலும் இந்திய அரசியல் சாசனம் 21ம் பிரிவின் கீழ் மீறல் செயலாகும்” என்று யோகி ஆதித்யநாத் அரசைக் கண்டித்தது.

மேலும் லக்னோ மேஜிஸ்ட்ரேட் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை மார்ச் 16க்குள் தாக்கல் செய்யுமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக நீதிமன்றம் ஞாயிறன்று செயல்படாது, ஆனால் பொதுநல மனுவின் அவசரம் கருதி ஞாயிறன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தை தானாகவே முன் வந்து நீதிமன்றம் விசாரிக்கத் தலைப்பட்டது.

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் இவர்கள் என்று கூறி புகைப்படம், முகவரி உள்ளிட்டவற்றுடன் லக்னோ முழுதும் ஹோர்டிங்குகளை வைத்தது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ‘இது இவர்களின் உயிருக்கே ஆபத்தாகச் சென்று விடும்’ என்று யோகி அரசின் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். மேலும் அந்த ஹோர்டிங்கில் இவர்களால் ரூ.1.55 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது, இந்த 57 பேர்களிடமிருந்து இந்தத் தொகை வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி மனிதர்களின் சுய விவரங்களை வெளிப்படையாக பேனர் வைப்பது “அதிகாரங்களை பாரபட்சமாகச் செயல்படுத்துவதன் ஓர் முறை” என்று கோர்ட் கண்டித்தது.

உ.பி.அரசு தரப்பில் வாதாடிய தலைமை வழக்கறிஞர் இத்தகைய பேனர்களை வைக்க சட்டத்தில் இடமில்லை என்பதை ஒப்புக் கொண்டார், ஆனால் இதில் பொதுநலம் என்ற வரம்பை கோர்ட் தேர்ந்தெடுத்தது தவறு எனறு வாதாடினார். மேலும் இத்தகைய பேனர்கள் சமூக விரோத சக்திகள் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்பதற்காகவே என்று வாதாடினார்.

ஆனால், நீதிபதிகள் இதனை ஏற்க மறுதது, “உத்தரப் பிரதேச மாநிலத்தில் லட்சக்கணக்கானோர் சிறையில் இதே காரணங்களுக்காக அடைக்கப்பட்டிருக்கும் போது குறிப்பாக இவர்களை மட்டும் புகைப்படம், முகவரி வெளியிட்டு பொது இடங்களில் வைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதற்கான நியாயப்பாடுகளை அரசு வழங்க முடியாது, மேலும் இது தொடர்பாக தலைமை வழக்கறிஞர் திருப்திகரமான பதிலை அளிக்கத் தவறிவிட்டார்” என்று கூறி பேனர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x