Published : 09 Mar 2020 06:57 AM
Last Updated : 09 Mar 2020 06:57 AM

கேரள மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல்

கேரளாவில் மேலும் 5 பேருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும்சுற்றுவட்டார பகுதிகளில் கோவிட்-19 வைரஸ்காய்ச்சல் பாதிப்பால் 19 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதே காய்ச்சல் காரணமாக உத்தர பிரதேசம் ஆக்ராவில் 6 பேர், காஷ்மீரின் லடாக்கில் 2 பேர், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 2 பேர், தமிழகம், ஹைதராபாத்தில் தலா ஒருவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம்சீனாவில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய மருத்துவ மாணவி உட்பட 3பேருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல்தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு 3 பேரும் வீடு திரும்பினர்.

இந்நிலையில் கேரளாவில் மேலும் 5 பேருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்றுஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் என 3 பேர் கடந்த பிப்ரவரி 29-ம் தேதி இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வந்துள்ளனர். விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனையை தவிர்த்து 3 பேரும் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அந்த குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் 2 பேருக்குகாய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அப்போதுதான் இத்தாலி பயண விவரம் மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து 2 பேரும் பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையின் தனி வார்டில் சேர்க்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய தாய் (50), தந்தை (55), மகன் (22) ஆகியோரை சுகாதாரத் துறை அதிகாரிகள் தேடிக் கண்டுபிடித்தனர். அவர்களுக்கும் காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. அவர்கள் 3 பேரும் பத்தனம்திட்டா அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஐந்து பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் 5 பேருக்கும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல்தொற்றியிருப்பது கடந்த சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சீனா, இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கேரளா திரும்புவோர் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதை தவிர்ப்பது சட்டவிரோதமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய குடும்பத்தினர், விமான நிலையத்தில் இருந்து ஒரு காரில் வீட்டுக்கு சென்றுள்ளனர். சிசிடிவி கேமரா அடிப்படையில் அந்த காரின் ஓட்டுநரை சுகாதாரத் துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இதற்காக 8 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குடும்பத்தினரோடு நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி 19, கேரளா 8, ஆக்ராவில் 6, லடாக்2, ஜெய்ப்பூர் 2 , தமிழகம் 1, ஹைதராபாத் 1 என மொத்தம் 39 பேர் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x