Last Updated : 08 Mar, 2020 11:43 AM

 

Published : 08 Mar 2020 11:43 AM
Last Updated : 08 Mar 2020 11:43 AM

கர்நாடகாவில் அரசு, தனியார் அலுவலகத்தில் பயோ மெட்ரிக் வருகை பதிவு நிறுத்தம்

பெங்களூரு

கோவிட்-19 வைரஸ் பரவல் எதிரொலியாக கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யும் முறை தற்காலிகமாக நிறுத்தப்படும் என அம்மாநில மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெங்களூரு, மங்களூரு, மைசூரு, ஹூப்ளி உள்ளிட்ட இடங்களில் கரோனா வைரஸ்பரவி வருவதாக வதந்திகள் பரவியதால் பொதுமக்கள் முகமூடி அணிந்து வலம் வருகின்றனர். விடுமுறை தினமான நேற்று பெங்களூருவில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பிரதான சாலைகளில் ஆள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக மருத்துவ கல்வித்துறை அமைச்சர்சுதாகர் நேற்று பெங்களூருவில் உள்ள கே.ஆர்.மருத்துவமனையில் கோவிட்-19 வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் சுதாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் இதுவரை ஒருவர் கூட கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படவில்லை. எனவே கோவிட்-19 வைரஸ் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியை பொதுமக்கள் நம்பவேண்டாம். கோவிட்-19 வைரஸ்பீதியில் இருந்து வெளிவந்து, மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம். இருப்பினும்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா முழுவதும் 2500நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க பெங்களூரு மற்றும்மங்களூரு சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். கார்வார் துறைமுகத்துக்கு கப்பலில் வருபவர்களுக்கும் சோதனை நடத்தப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையில் விரல்வைத்து வருகை பதிவு செய்யும் முறையை தற்காலிக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் பயோமெட்ரிக் முறையை தற்காலிகமாக நிறுத்துமாறு அந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 வைரஸ் பீதி எதிரொலியாக பெங்களூருவில் முகமூடி, சானிடைசர் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மருந்தகங்களில் ரூ.150 விலையுள்ள என்.95 வகை முககவசம் ரூ.500 வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. அதே போல சாதாரண தூசியை தடுப்பதற்காக அணியும் முகமூடியின் விலையும் ரூ.150 வரை உயர்ந்துள்ளது. இதே போல சானிடைசர் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு சில தினங்களில் ஏராளமானோர் முகமூடி, சானிடைசர் வாங்குவதால் மருந்தகங்களில் அவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரா.வினோத்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x