பிஹாரில் சாலை விபத்தில் 12 பேர் பலி

பிஹாரில் சாலை விபத்தில் 12 பேர் பலி
Updated on
1 min read

முசாபர்பூர்: பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 28-ல் உள்ள கந்தி பகுதி உள்ளது. இங்கு 14 பேருடன் வேகமாக சென்ற கார், செங்கல் ஏற்றிக்கொண்டு தவறான திசையில் வந்த டிராக்டர் மீது மோதியது.

காரில் இருந்தவர்கள் ஹத்தாவுரி பகுதியைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் ஆவர். வேலைக்காக சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள பக்சார் சென்ற இவர்கள் ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் விபத்தில் சிக்கினர். இதில் 7 பேர் அதே இடத்திலும் 4 பேர் மருத்துவமனை செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். மேலும் டிராக்டரில் வந்த ஒருவரும் உயிரிழந்தார். காரில் வந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in