Last Updated : 08 Mar, 2020 10:42 AM

 

Published : 08 Mar 2020 10:42 AM
Last Updated : 08 Mar 2020 10:42 AM

20 மணிநேர விசாரணைக்குப்பின் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டின் அடிப்படையில் 20 மணி நேர விசாரணைக்குப்பின் யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரை அமலாக்கப்பிரிவு துறை இன்று அதிகாலை கைது செய்தனர்.

யெஸ் வங்கி முறைகேடாகப் பல நிறுவனங்களுக்குக் கடன் வழங்கி, பெரும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு ராணா கபூர் ஒத்துழைக்காததையடுத்து, அவரை அமலாக்கப்பிரிவினர் கைது செய்தனர்.

இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் ராணா கபூர், அதன்பின் அவரை விசாரணைக்காக அமலாக்கப்பிரிவினர் காவலில் எடுக்க உள்ளனர்.

யெஸ் வங்கி தற்போது கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இல்லை என்ற சந்தேகத்தின் பேரில் பல வங்கிகள் கடன் அளிக்க முன்வராத நிறுவனங்களுக்கும் யெஸ் வங்கி கடன் அளித்து வராக்கடன் அதிகரித்தது.

யெஸ் வங்கி தனது நிதி மூலதனத்தை ஆர்பிஐ நிர்ணயித்த வரம்புக்குள் கொண்டுவர கடும் முயற்சியில் இறங்கி இருந்தது. மூலதனத்தை உயர்த்த ரூ.14,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்ட நிலையில் போதுமான முதலீடு வராத நிலையில் ரூ. 10 ஆயிரம் கோடியாகக் குறைத்தது.

மேலும், ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்குமேல் கடன் அளித்துள்ளது. இவற்றில் சில நிறுவனங்கள் திவால் நிலையில் உள்ளன. இதனால் யெஸ் வங்கியின் வாராக் கடன் கடுமையாக உயர்ந்தது.

வாராக்கடன் அதிகரித்ததால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி எடுத்துக் கொண்டது.
இந்நிலையில், யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வோர்லியில் உள்ள இல்லமான சாமுத்திரா மஹாலில் வெள்ளிக்கிழமை இரவு முதல் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராணா கபூர் நிர்வாகத்தின்கீழ் வங்கி இருந்தபோது தகுதியில்லாத பல பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் வழங்கப்பட்டுள்ளது.

அதற்குப் பிரதிபலனாக அந்த நிறுவனங்கள் ராணா கபூரின் மனைவியின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தியுள்ளன என்று குற்றச்சாட்டின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.
அதன்பின் ராணா கபூரிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கப்பிரிவினர் தங்கள் அலுவலகத்துக்கு நேற்று பிற்பகலில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், ராணா கபூரின் மனைவி பிந்து, மகள்கள் ராகி கபூர் டான்டன், ரோஷினி கபூர், ராதா கபூர் ஆகியோருக்கும் இந்த சட்டவிரோத பரிவர்த்தனையில் பங்கு இருப்பதாக அமலாக்கப்பிரிவினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் இவர்களிடமும் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவினர் தயாராகி வருகின்றனர்.

மேலும் டிஹெச்எப்எல் நிறுவனத்துக்கு ரூ.600 கோடி கடன் வழங்கி அந்த கடன் வாராக்கடனாக மாறியுள்ளது. இந்த நிறுவனத்துக்குக் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பது தொடரப்பாக ராணா கபூர் மீது அமலாக்கப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடனைத் திருப்பிச் செலுத்தத் தகுதியில்லாத பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன் வழங்கியதால், அந்த கடன் வாராக்கடனாக மாறியுள்ளன. அந்த கடனுக்குப் பிரதிபலனாக அந்த வங்கிகள் ராண கபூரின் மனைவி, மகள்கள் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளன என்று தெரியவந்துள்ளது.

ஆனால், இதுதொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க ராணா கபூர் மறுத்ததால் அவரை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தில் அமலாக்கப்பிரிவினர் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x