Published : 07 Mar 2020 09:53 PM
Last Updated : 07 Mar 2020 09:53 PM

டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க  தயக்கம் ஏன்? - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

நாடாளுமன்றத்தில் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவையில் நேற்று சபாநாயகர் இருக்கைக்கு சென்று பேப்பர்களை பறித்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அலுவல்கள் ஏதும் எடுக்கப்படாமல் முடங்கியுள்ளது. நாடாளுமன்றம் ஹோலி விடுமுறைக்கு பிறகு வரும் மாரச் 11-ம் தேதி மீண்டும் கூடுகிறது. அப்போது எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடைபெறும் என சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார். மேலும் விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பதிலளிக்கவுள்ளார்.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியதாவது:
‘‘நாடாளுமன்றத்தின் 2-வது அமர்வு கூடியதுமே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மத்திய அரசு முன்வரவில்லை. டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசுக்கு என்ன தயக்கம். இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றங்களிலும் அனைத்து பிரச்சினைகளும் விவாதிக்கப்படுகிறது. மார்ச் 11-ம் தேதி விவாதம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. அறிவித்தபடியே விவாதம் நடக்கும் என நம்புவோம்.’’ என அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x