Published : 07 Mar 2020 07:46 AM
Last Updated : 07 Mar 2020 07:46 AM

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அரசு ஊழியருக்கு பாஸ்போர்ட் கிடையாது

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிரு்தாலோ அல்லது விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலோ சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற முடியாது என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அனுமதி தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் மீது ஏதாவது கிரிமினல் வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் அவர் பாஸ்போர்ட் பெற முடியாது.

மேலும், ஊழியர் இந்தியாவைவிட்டு வெளியே சென்றால், அதனால், ஏதாவது ஒரு நாட்டுடன் இந்தியாவின் நல்லுறவு பாதிக்கப்படும் என்றாலோ அல்லது மனு செய்தவருக்கு பாஸ்போர்ட் வழங்குவது பொதுநலன் சார்ந்ததாக இருக்காது என்று மத்திய அரசு கருதினாலோ அவருக்கு பாஸ்போர்ட் மறுக்க அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் சட்ட விதிகளின்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை விட்டு செல்ல நீதிமன்றம் தடை விதித்திருந்தாலோ, வழக்கில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தாலோ, கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தோலோ அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படாது. இது தொடர்பாக மத்திய அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கும் பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x