முக கவசத்திற்கு தட்டுப்பாடா? - பதுக்கினால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

முக கவசத்திற்கு தட்டுப்பாடா? - பதுக்கினால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை
Updated on
1 min read

கரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில் முக கவசம் மற்றும் கையுறைகளை பதுக்கவோர் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் 95,000க்கும் அதிகமான நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கரோனாவில் பலி எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 3,291 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. கரோன வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவி வருவதால் தற்காப்பு நடவடிக்கையாக பலரும் முக கவசம் அணிந்து வெளியே செல்கின்றனர். இதனால் முக கவசத்துக்கு கூடுதல் தேவை ஏற்பட்டுள்ளது. முக கவசங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவி வருவதால் பலரும் முக கவசம் அணிகின்றனர். இதனால் முக கவசத்துக்கு கூடுதல் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு சிலர் முக கவசங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது. முக கவசம் மற்றும் கையுறைகளை பதுக்குவோர் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதுமான அளவு முக கவசம் இருப்பில் உள்ளதை உறுதி செய்து வருகிறோம்’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in