Published : 06 Mar 2020 01:37 PM
Last Updated : 06 Mar 2020 01:37 PM

சிஏஏ போராட்டம்: வன்முறையாளர்கள் பெயர், முகவரி, புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்கள்: உ.பி. போலீசின்  ‘ஆபத்தான’ செயலால் பீதி

சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக 57 பேர்களின் பெயர், முகவரி, புகைப்படம் அடங்கிய பெரிய பெரிய ஹோர்டிங்குகளை உத்தரப்பிரதேச போலீஸ் நகரெங்கும் வைத்துள்ளதால் அடையாளம் காணப்பட்ட 57 பேரும் தங்கள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பீதியில் உறைந்துள்ளனர்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தேச விரோத கருத்துக் கூறுபவர்களை நேற்று எச்சரித்திருந்ததுக் குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பரில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற சிஏஏவை எதிர்த்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்றன, இதில் வன்முறைச் சக்திகள் நுழைந்ததையடுத்து அமைதிப் போராட்டம் வன்முறையாக மாற துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் உ.பி. போலீசார் உத்தரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்று கூறி அவர்களது புகைப்படம், பெயர், முகவரி அடங்கிய பெரிய பெரிய ஹோர்டிங்குகளை ஆங்காங்கே வைத்துள்ளன, பொதுமக்கள் இதனை ஆங்காங்கே நின்று புகைப்படம் எடுத்து தங்கள் சமூக வலைத்தளங்களி வெளியிட்டு வருகின்றனர்.

வன்முறையில் பொதுச்சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இவர்கள்தான் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. இழப்பீடு கொடுக்கவில்லையெனில் இவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், இந்த போஸ்டரின் படி மொத்த சேத மதிப்பு ரூ.1.55 கோடியாகும்.

சுமார் 57 பேர் இதில் அடையாளம் காணப்பட்டு புகைப்படங்களுடன் முகவரி, பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இழப்பீடு கொடுக்க நோட்டீஸ் அனுப்பப் பட்டவர்களில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி தாராப்புரி, வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான மொகமத் ஷோயப், காங்கிரஸ் உறுப்பினர் சதாஃப் ஜாஃபர், ஆசிரியர் ராபின் வர்மா, தலித் செயல்பாட்டாளர் பவன் ராவ் அம்பேத்கர் ஆகியோர் பெயர்களும் அடங்கும்.

காங்கிரஸ் உறுப்பினர் சதாஃப் ஜாபர் கூறும்போது, ‘இது ஒரு மோசமான யுக்தி, இப்போது இந்தப் புகைப்படத்தில் உள்ளவர்களை சமூகவிரோதிகள் பார்த்தால் எங்களைக் கொல்லக் கூட தயங்க மாட்டார்கள். புகைப்படங்கள், முகவரி, இவற்றால் எங்கள் குடும்பத்தினர், குழந்தைகளுக்கு ஆபத்து” என்றார்.

57 பேர்களில் ஒருவரான ராபின் வர்மா கூறும்போது, “விவகாரம் கோர்ட்டில் இருக்கும் போது குற்றவாளிகள் போல் இந்தப் புகைப்படங்களை வெளியிட்டிருப்பது சட்ட விரோதச் செயல், இதனை போலீஸே செய்கிறது” என்று சாடினார்.

மேலும் எங்கள் வீடுகலை சமூகவிரோதிகள் தாக்கினால் இதனால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டால் அதற்கு லக்னோ போலீஸ் தான் பொறுப்பு என்று இவர்கள் கண்டித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x