

என். மகேஷ்குமார்
திருச்சானூரில் ரூ.74.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி நிலையத்தை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி நேற்று திறந்து வைத்தார்.
திருப்பதி-சென்னை நெடுஞ் சாலையில், திருச்சானூர் பைபாஸ் சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.74.70 கோடி செலவில் பத்மாவதி நிலையம் எனும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டது. இந்த கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது:
5.35 ஏக்கர் பரப்பளவில் ரூ.74.70 கோடி செலவில், 8 அடுக்கில் பத்மாவதி பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதில், 80 ஏசி, 120 சாதாரண அறைகள் உள்ளன. ஒரே சமயத்தில் 135 கார்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் 1600 பக்தர்கள் இந்த விடுதிகளில் தங்கலாம்.
இதன் அறைகளை ஆன்லைனிலும் முன் பதிவு செய்து கொள்ளலாம். இங்கு, பக்தர்களின் வசதிக்காக ஏடிஎம் கள், ஸ்ரீ வாணி அறக்கட்டளை மையம், லக்கேஜ்களை வைக்கும் மையம், ஹோட்டல் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.