Last Updated : 04 Mar, 2020 01:35 PM

 

Published : 04 Mar 2020 01:35 PM
Last Updated : 04 Mar 2020 01:35 PM

தர்மபுரி தொகுதி விவசாயிகள் பலன் பெற தடுப்பணை கட்ட வேண்டும்: மக்களவையில் திமுக எம்.பி. செந்தில்குமார் கோரிக்கை

தர்மபுரி தொகுதியின் விவசாயிகள் பலன்பெற தோனி மடுவு எனும் இடத்தில் தடுப்பணை கட்ட அதன் திமுக எம்.பியான செந்தில்குமார் கோரியுள்ளார். இதற்காக தமிழக அரசிற்கு அனுமதி மற்றும் நிதி அளித்து உதவுறுத்துமாறு அவர் மக்களவையில் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் செந்தில்குமார் பேசியதாவது: தர்மபுரி மக்களவை தொகுதியிக்குட்பட்ட மேட்டூர் தாலுகாவில் பருகூர் மலை உள்ளது. மழைக்காலங்களில் இங்குள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உற்பத்தியாகி கிளம்பும் தண்ணீர், நேராகச் சென்று, பாலாறு நதியில் கலக்கிறது.

அவ்வாறு சென்றடையும்போது, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லையோரப் பகுதியான தோனி மடுவு என்ற இடத்தின் பாலாற்றில் கலக்கிறது. இந்த தோனி மடுவு என்ற இடத்தில், ஒரு புதிய தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது.

காரணம், இங்கு தடுப்பணை கட்டப்பட்டால், அப்பகுதியைச் சுற்றிலும் உள்ள 11,000 ஏக்கர்கள் அளவுக்கான, பரந்துவிரிந்து கிடக்கும் விவசாய பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் கிடைத்து, பலனாகும், அதுதவிர, மேட்டூர் சட்டசபைத் தொகுதியைச் சேர்ந்த, 105 கிராமங்களின், குடிநீர் பற்றாக்குறை உள்பட அத்தியாவசிய தண்ணீர் தேவைகளையும், அந்த தடுப்பணை பூர்த்தி செய்து விடும்.

இந்த புதிய தடுப்பணையை கட்டுவதற்கு, நிலம் கையகப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு, அப்பகுதியிலேயே, போதிய அளவுக்கு, 190 ஏக்கர் வனத்துறை நிலப்பரப்பும், 60 ஏக்கர் தனியார் நிலப்பரப்பும் உள்ளது.

எனவே, இந்த நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கான, ஒப்புதலைப் பெறுவதற்கு, மத்திய அரசிடம், தமிழக அரசு விரைந்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தடுப்பணை, அப்பகுதி மக்களுக்கு, மிகப்பெரிய அளவில் பயனளிப்பதால் அதற்கான அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

தோனி மடுவு தடுப்பணை கட்டும் திட்டத்தை, நிறைவேற்றுவதற்கு தேவையான நிதி உதவியையும், மத்திய அரசிடம் உரிய முறையில் தமிழக அரசு கேட்டுப் பெற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x