Last Updated : 03 Mar, 2020 07:29 PM

 

Published : 03 Mar 2020 07:29 PM
Last Updated : 03 Mar 2020 07:29 PM

புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து உதவி: தீவிர விசாரணைக்குப் பிறகு தந்தை, மகளை கைது செய்த என்.ஐ.ஏ.

ஸ்ரீநகர்

நாட்டையே உலுக்கிய புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய விசாரணை முகமை செவ்வாயன்று (3-3-2020) தந்தை, மகள் ஆகிய இருவரை கைது செய்துள்ளது. இந்தக் கைது நடவடிக்கை இந்த விசாரணையில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அதாவது கொடூரப் பயங்கரவாதத் தாக்குதலின் சதிவேலையில் கைது செய்யப்பட்ட இந்த தந்தையும் மகளும் இருந்ததாக ஸ்ரீநகர் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ஹக்ரிபோராவில் என்.ஐ.ஏ விசாரித்த பிறகு தாரிக் அகமெட் ஷா மற்றும் இவரது மகள் இன்ஷா ஆகியோரை என்.ஐ.ஏ கைது செய்தது, இவர்கள் வீட்டில்தான் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி ஆதில் அஹ்மெட் தார் வீடியோ படம் ஒன்றைப் பிடித்துள்ளார். இதே அகமெட் தார்தான் வெடிபொருட்கள் நிரம்பிய காரை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி வெடிக்கச் செய்துள்ளார். இந்த வீடியோவை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வெளியிட்டது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட தாரிக் அகமெட் ஷா என்ற லாரி ஓட்டுநர் தன் வீட்டை தாக்குதல் நடத்திய தார், பாகிஸ்தான் பயங்கரவாதி ஐ.இ.டி தயாரிப்பவனான மொகமட் உமர் ஃபரூக், இன்னொரு பாகிஸ்தானிய பயங்கரவாதியான கம்ரன் (இவர்கள் இருவரும் பிற்பாடு பாதுகாப்புப் படையினரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்), சமீத் அகமெட் தார், இவர் ஒரு ஜெய்ஷ் பயங்கரவாதி, இவர் புல்வாமாவைச் சேர்ந்தவர், மேலும் இஸ்மாயில் என்கிற இப்ராஹிம் என்கிற அத்னன், இவரும் ஒரு பாகிஸ்தானிய பயங்கரவாதி ஆகியோர் இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக என்.ஐ.ஏ.விடம் ஒப்புக்கொண்டார்.

இந்த ஷா தான் பயங்கரவாதிகளுக்கு இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு தன் வீட்டை புகலிடமாக்கி உதவியுள்ளார். இங்குதான் தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆதில் அகமெட் தார் வீடியோவும் எடுத்துள்ளார்.

தாரிக் அகமெட் ஷாவின் 23 வயது மகல் இன்ஷா என்பவர் வீட்டில் இருந்த தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் பிற வசதிகளைச் செய்துக் கொடுத்ததாக என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“முதற்கட்ட விசாரணையில் இன்ஷா ஜேன் பாகிஸ்தான் பயங்கரவாதி முகமட் உமர் பரூக்குடன் தொடர்பில் இருந்துள்ளார், இவர் ஒரு ஐஇடி தயாரிப்பாளர் ஆவார். இவரிடம் இன்ஷா தொலைபேசி சமூகவலைத்தளம் மூலம் தொடர்பிலிருந்தார்” என்று என்.ஐ.ஏ. செய்தித் தொடர்பாளர் பிடிஐ யிடம் தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 5 பேரை ஏற்கெனவே பாதுகாப்புப் படையினர் பல்வேறு என்கவுண்டரில் கொன்று விட்ட நிலையில் இந்த விவகாரத்தில் விசாரணை மேலே செல்ல முடியாத நிலை இருந்தது.

என்.ஐ.ஏ.வுக்கு இது ஒரு பெரிய சவாலாக அமைந்தது. புல்வாமா தாக்குதலுக்குப் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர்கள் யார் என்ற ஒரு துப்பும் என்.ஐ.ஏவுக்குக் கிடைக்கவில்லை.

முதலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தார் பயன்படுத்திய கார் உரிமையாளரைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது, வாகனத்திலிருந்து எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. கார் வெடித்துச் சிதறியதால் அதன் உரிமையாளரை எதை வைத்துக் கண்டுபிடிப்பது என்பது சவாலாக இருந்தது.

ஆனால் தடயவியல் முறைகள் மற்றும் கடும் சிக்கல்கள் நிறைந்த விசாரணைகளின் உதவியுடன் காரின் எண் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு காரின் முதல் உரிமையாளர் முதல் கடைசியாக வைத்திருந்தவர் உட்பட விவரத்தைத் திரட்ட முடிந்தது.

ஜே.இ.எம். அமைப்பைச் சேர்ந்த மொகமது ஹசன் ஒரு வீடியோவில் இந்தக் குழுதான் தாக்குதலுக்கு பொறுப்பு என்று தெரிவிக்கவும், அது தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு ஐபி முகவரி தடம் காணப்பட்டது, அந்த ஐபி முகவரி பாகிஸ்தானில் உள்ள கணினியுடையது என்பது தெரியவந்தது.

இந்நிலையில்தான் தீவிரவாதிகளுக்கு வீடு தந்து உதவியதோடு சகல விதமான வழிமுறைகளையும் செய்து கொடுத்த தாரிக் அகமெட் ஷா, மகள் இன்ஷா ஆகியோரை போலீஸார் விசாரித்து பிறகு தேசிய விசாரணை முகமையான என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x