Last Updated : 02 Mar, 2020 01:39 PM

 

Published : 02 Mar 2020 01:39 PM
Last Updated : 02 Mar 2020 01:39 PM

நாளை தூக்கு தண்டனையா? நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் : கோப்புப்படம்

புதுடெல்லி

2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தனது தண்டனையைக் குறைக்கக் கோரி தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத்தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

திஹார் சிறை நிர்வாகம் சார்பிலும், நிர்பயா பெற்றோர் சார்பிலும் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூக்கு தண்டனை குற்றவாளிகளில் பவன் குப்தா தவிர மற்ற மூவர்களான அக்சய் குமார் சிங், வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டன.

இந்தச் சூழலில் குற்றவாளி பவன் குமார் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரியும், தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஆர்.எப். நாரிமன், ஆர் பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தங்கள் சேம்பரிலேயே இந்த மனுவை விசாரித்தனர்.

அப்போது, நீதிபதிகள், "மனுதாரர் பவன்குமார் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்கிறோம்" என அறிவித்தனர்.

இதற்கிடையே சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் இருந்து 7 நாட்களுக்குத் தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று சட்டவிதி இருக்கிறது. ஆனால், நாளை அதிகாலை தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீராய்வு மனு மீது முடிவு கிடைத்தபின் ஒரு வாரத்துக்குத் தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்பதால், நாளை தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x