தீவிரவாதி போல் நடத்துகின்றனர்- சிறையில் உள்ள ஆசம்கான் புகார்

ஆசம்கான்
ஆசம்கான்
Updated on
1 min read

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் ஆசம்கான். மக்களவை உறுப்பினராகவும் அவர் உள்ளார்.

இந்நிலையில் ஆசம்கான் மகனான அப்துல்லா ஆசம் லக்னோ, ராம்பூர் ஆகிய 2 நகரங்களிலும் பிறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளதாக பாஜகவைச் சேர்ந்த ஆகாஷ் சக்சேனா என்பவர் புகார் அளித்தார். அவரது கல்விச் சான்றிதழில் 1993 என்றும், லக்னோ மாநகராட்சியில் பெற்ற பிறப்புச் சான்றிதழில் 1990 என்றும் பிறந்த ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து தொடரப்பட்ட போலி பிறப்புச் சான்றிதழ் வழக்கில் ஆசம்கான், அவர் மனைவி தசீன் பாத்திமா, மகன் அப்துல்லா ஆசம் ஆகியோர் ராம்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து மூவருக்கும் எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மூவரும் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை ஆஜராகினர். மூவரும் கைது செய்யப்பட்டு சீதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று ஆசம்கான் ராம்பூரிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார்.

முன்னதாக போலீஸ் வேனில் இருந்தவாறு ஆசம்கான் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சிறையில் என்னை தீவிரவாதியைப் போல் நடத்தினர். மனிதத்தன்மையற்ற முறையில் என்னிடம் சிறை அதிகாரிகள் நடந்துகொண்டனர்’’ என்றார்.

மார்ச் 2-ம் தேதி வரை அவர்களை நீதிமன்றக் காவலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in