Published : 01 Mar 2020 07:53 AM
Last Updated : 01 Mar 2020 07:53 AM

குடியுரிமை சட்ட விவகாரத்தால் மோதல்: மேகாலயா கலவரத்தில் 2 பேர் உயிரிழப்பு

குடியுரிமை சட்ட விவகாரத்தால் மேகாலயாவில் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஷில்லாங்கில் ஊரடங்கு உத்தரவு அமல்செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். மேகாலயா முழுவதையும் 'இன்னர் பெர்மிட்டின்' கீழ் கொண்டு வர வேண்டும் என்று கே.எஸ்.யு. மாணவர் அமைப்பு மற்றும் பழங்குடியின அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மேகாலயாவில் வாழும் பழங்குடிகள் அல்லாத மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் கிழக்கு காஸி ஹில்ஸ் மாவட்டத்தில் நேற்று முன்தினம் குடியுரிமை சட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது கே.எஸ்.யு.மாணவர் அமைப்புக்கும் பழங்குடிகள் அல்லாத மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இருதரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதில் கே.எஸ்.யு.அமைப்பை சேர்ந்த ஒருவர்உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து மேகாலயாமுழுவதும் கலவரம் வெடித்துள்ளது. தலைநகர் ஷில்லாங் உட்பட பல்வேறு நகரங்களில் அரசு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பழங்குடிகள் அல்லாத மக்களின் வீடுகள்,கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஷில்லாங்கில் நேற்று நடைபெற்ற கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு அமல்

மாநிலத்தில் மொத்தம் 11 மாவட்டங்கள் உள்ளன. இதில் 6 மாவட்டங்களில் மொபைல் போன் இணைய சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஷில்லாங்கின் சில பகுதிகளில் ஊரடங்குஉத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மாநில முதல்வர் கான்ராட் சங்மா அழைப்பு விடுத்துள்ளார். மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி நடத்துகிறது. இந்த கூட்டணியில் பாஜகவும் அங்கம் வகிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x