Last Updated : 29 Feb, 2020 04:16 PM

 

Published : 29 Feb 2020 04:16 PM
Last Updated : 29 Feb 2020 04:16 PM

நள்ளிரவில் நீதிபதிகள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கும்முன் அரசு கவனமாக இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கருத்து

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் : கோப்புப்படம்

புதுடெல்லி

நள்ளிரவில் நீதிபதிகளுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கும் போது, மத்திய அரசு சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடந்த கலவரத்தில் 42 பேர் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர், " மக்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய போலீஸாருக்கு அறிவுறுத்தினார்.

இடமாற்ற் செய்யப்பட்ட நீதிபதி முரளிதர்

இந்நிலையில் நீதிபதிகளைத் தேர்வு செய்யும், இடமாற்றம் செய்யும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பு, உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

டெல்லி கலவர வழக்கு விசாரணையின் போது நீதிபதி முரளிதர் பிறப்பித்த உத்தரவும், அவருக்குப் பிறப்பிக்கப்பட்ட இடமாற்ற உத்தரவும் ஒரே நேரத்தில் வந்ததால் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், வெறுப்புப்பேச்சு தொடர்பாக நீதிபதி முரளிதர் பிறப்பித்த உத்தரவுக்கு முன்பாகவே, உச்ச நீதிமன்ற கொலிஜியம் இடமாற்ற உத்தரவைப் பிறப்பித்திருக்கக்கூடும்.

ஆனால், எப்போது இடமாற்ற உத்தரவை கொலிஜியம் பிறப்பித்தார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது. நாட்டில் நிலவும் சூழல் மிகவும் கொந்தளிப்பாகவும், ஊடகங்கள் மிகுந்த விழிப்புடனும் இருக்கின்றன. இந்த நேரத்தில் நள்ளிரவில் நீதிபதியை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

நள்ளிரவு நேரத்தில் பிறப்பிக்கப்படும் இதுபோன்ற உத்தரவுகளை மக்கள் வேறுவிதமாக நினைக்கவும், தவறாக அர்த்தம் கொள்ளவும் வாய்ப்புள்ளது.

உண்மையில் டெல்லி கலவர வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎன் பாட்டீல், தலைமையிலான அமர்வு எடுப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் விடுப்பில் சென்றதால் அவருக்குப் பதிலாக மூன்றாவது மூத்த நீதிபதி முரளிதர் வழக்கை விசாரித்தார்.

அதேசமயம் இடமாற்றம் செய்யப்பட்ட மறுநாளை ஹரியானா,பஞ்சாப் நீதிமன்றத்தில் முரளிதரை பணிக்குச் செல்லக் கூறி உத்தரவுகள் ஏதும் எனக்குத் தெரிந்து இல்லை. இதுபோன்ற இடமாற்ற நேரத்தில் குறைந்தபட்சமாக ஒருவாரம் அவகாசம் அளிப்பார்கள்

இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x