Last Updated : 29 Feb, 2020 03:05 PM

 

Published : 29 Feb 2020 03:05 PM
Last Updated : 29 Feb 2020 03:05 PM

மக்கள் அனைவருக்கும் நலனும், நீதியும் கிடைக்க உறுதி செய்வது அரசின் முன்னுரிமை: பிரதமர் மோடி பேச்சு

பிரயாக்ராஜ்ஜில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

அலகாபாத்

மக்கள் அனைவருக்கும் நலன்களும், நீதியும் கிடைக்க உறுதி செய்வதுதான் அரசின் பொறுப்பு. அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவர் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படை இதுதான் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நலன்களைப் பெறுவதையும், நீதியைப் பெறுவதையும் உறுதி செய்வது ஒவ்வொரு அரசின் முக்கியப் பொறுப்பாகும். அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவர் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படை இதுதான்.

நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் சேவை செய்வதுதான் எனது அரசின் முன்னுரிமை. இதற்கு முன் இருந்த அரசுகள் மாற்றுத்திறனாளி மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், எனது தலைமையிலான மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேடி அதைக் குறைத்துள்ளது.

இதற்கு முந்தைய அரசுகள், சில நலத்திட்ட முகாம்கள் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்காக அமைத்தனர். கடந்த 5 ஆண்டுகளில் நாடுமுழுவதும் ஏறக்குறைய 9 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன,

இதற்கு முந்தைய அரசு ரூ.380 கோடிக்கு மாற்றுத்திறனாளிளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிலையில், எனது தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.900 கோடிக்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளது.

நிச்சயம் நாங்கள் அளித்த உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வலிமையான நம்பிக்கையை வழங்கும். உங்களின் உண்மையான பலம் என்பது பொறுமை, திறமை, மதிநுட்பம்தான்.

கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் நாட்டில் நூற்றுக்கணக்கான சாலைகள், 700 ரயில்நிலையங்கள், விமானநிலையங்கள் போன்றவை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முதன்முதலாக எனது அரசு சட்டம் இயற்றியது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் பெறும் பலன்களின் அளவு 7 லிருந்து 21- ஆக அதிகரித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 3 முதல் 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது

முதியோர் நலனுக்காகவும் எனது அரசு உழைத்து வருகிறது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா எனும் திட்டத்தைச் செயல்படுத்தி ஏழை முதியோருக்குத் தேவையான உதவிகளை வழங்குகிறோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் முதியோர்கள் சிகிச்சை பெறுவது குறைந்திருந்த நிலையில் இப்போது அதிகரித்துள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x