Last Updated : 28 Feb, 2020 08:57 PM

 

Published : 28 Feb 2020 08:57 PM
Last Updated : 28 Feb 2020 08:57 PM

டெல்லி கலவரத்தில் பலி 42 ஆக அதிகரிப்பு; 123 எஃப்ஐஆர் பதிவு: 630 பேர் கைது- பள்ளிகள் நாளை திறப்பு

டெல்லி மஜ்பூர் பகுதியில் இயல்புநிலை திரும்பியதையடுத்து போலீஸாருக்கு தேநீர் வழங்கிய மக்கள்

புதுடெல்லி

டெல்லி வடகிழக்கில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 42 பேராக அதிகரித்துள்ளது. 123 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 630 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மோதல் பெரும் வகுப்புக் கலவரமாக மாறியது.

டெல்லி வடகிழக்கில் உள்ள ஜாப்ராபாத், மஜ்பூர், சாந்த் பாக், குரேஜே காஸ், பாஜன்பூரா ஆகிய பகுதிகளில் பெரும் கலவரம் வெடித்தது. ஏராளமான பொதுச் சொத்துகள் சேதமடைந்தன. தனியார் வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டன.

இந்தக் கலவரத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து டெல்லி, ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி போலீஸின் செய்தித்தொடர்பாளர் மன்தீப் சிங் ராந்தவா கூறுகையில், "டெல்லி வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளார்கள். பல்வேறு பிரிவுகளில் 123 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் 630 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு கலவரம் நடந்த பகுதிகளில் ஆய்வு நடத்திச் சென்றுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கலவரம் நடந்த வடகிழக்கு டெல்லியில் இயல்பு நிலை திரும்பிவிட்டதால், பள்ளிகள் நாளை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 29-ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்தது.

நாளை பள்ளிக்கு முதல்வர்கள், ஆசிரியர்கள் மட்டும் வருவார்கள். அவர்கள் அங்குள்ள சூழலை ஆய்வு செய்வார்கள். பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம் நடத்தப்பட்டு, தற்போது அங்கு நிலவும் சூழல் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும். மேலும், சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்த சாதகமான சூழல் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி வடகிழக்குப் பகுதியில் நடந்த கலவரத்தால் சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஆதலால், தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து நாளை கூடும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x