Last Updated : 28 Feb, 2020 04:23 PM

 

Published : 28 Feb 2020 04:23 PM
Last Updated : 28 Feb 2020 04:23 PM

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா? -நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல்

2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளில் 4-வது நபர் பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்குத் தண்டனை நிறைவேற்ற டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சீராய்வு மனுவைப் பவன் குப்தா தாக்கல் செய்துள்ளதால் குறித்த நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவது தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது

ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

திஹார் சிறை நிர்வாகம் சார்பிலும், நிர்பயா பெற்றோர் சார்பிலும் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கிடையே குற்றவாளிகளில் ஒருவர் வினய் குமார் தனக்கு மனநிலை சரியில்லை, தலையில் காயம் ஏற்பட்டதாகக் கூறி மருத்துவ உதவி கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தூக்கு தண்டனை குற்றவாளிகளில் பவன் குப்தா தவிர மற்ற மூவர்களான அக்சய் குமார் சிங், வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டன.

பவன் குமாருக்கு மட்டுமே குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கும் வாய்ப்பும், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.

சீராய்வு மனுத் தாக்கல் செய்தால், அந்த மனு விசாரிக்கப்பட்டு அதன் முடிவு வந்தபின், அடுத்த ஒருவாரத்துக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றக்கூடாது என்ற சட்டவிதி இருக்கிறது. குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் பவன் குப்தா தரப்பில் தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி தெரிவித்துள்ளார். இந்த மனுத்தாக்கலால் வரும் மார்ச் 3-ம் தேதி தூக்குத் தண்டனை 4 பேருக்கும் நிறைவேறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x