Published : 28 Feb 2020 03:49 PM
Last Updated : 28 Feb 2020 03:49 PM

டெல்லியில் கலவரம் பாதித்த பகுதிகளில் ஆளுநர் ஆய்வு: மக்களுக்கு ஆறுதல்

டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் இன்று பார்வையிட்டார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பலியானோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கலவரத்தை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் கலவரம் பாதித்த மெளஞ்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு இன்று நேரில் சென்றார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர் சேதம் குறித்து விசாரித்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு தங்கள் நிலைமையை எடுத்துரைத்தனர். மேலும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x