

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் தீவிரவாத செயலுக்கு நிதி வழங்கியது தொடர்பான வழக்கில் வங்கதேச தீவிரவாதி உட்பட 2 பேர் குற்றவாளிகள் என கொல்கத்தா நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் நகரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி குண்டு வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இதில் வங்கதேச ஜமாத்-உல்-முஜாஹிதீன் (ஜேஎம்பி) தீவிரவாத அமைப்பின் ரஹமத்துல்லா (எ) சாஜித் மற்றும் இந்தியரான முகமதுபுர்ஹான் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இவர்கள் தீவிரவாத செயலுக்கு நிதியுதவி வழங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவுசெய்தது.
இது தொடர்பாக கொல்கத்தா செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
17-ல் தண்டனை விவரம்
விசாரணை முடிந்த நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த ரஹமத்துல்லாவும் முகமது புர்ஹானும் குற்றவாளிகள் என கொல்கத்தா நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் அடுத்த மாதம் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடுமையாக்கப்பட்ட சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வெளிநாட்டவரை குற்றவாளி என அறிவித்திருப்பது 2-வது முறையாகும். கடந்த 2017-ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த அல்-பாத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ