Published : 25 Aug 2015 03:48 PM
Last Updated : 25 Aug 2015 03:48 PM

இந்து பெண்ணிடம் பேசிய முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல்: மங்களூருவில் 13 பேர் கைது

மங்களூருவில் இந்து மதப் பெண்ணிடம் பேசியதாக முஸ்லிம் இளைஞரை சிலர் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தலைமறைவான 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மங்களூரு போலீஸார் தேடி வருகின்றனர்.

நேற்று (திங்கள்கிழமை) மங்களூருவின் அவதார் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு காரில், ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சிலர் இருவரது விவரத்தையும் கேட்டறிந்தனர்.

பின்னர், அந்த நபரை தரதரவென இழுத்துச் சென்ற கும்பல், அவரது ஆடைகளை களைந்து சாலையோரத்தில் இருந்த கம்பத்தில் அவரைக் கட்டி வைத்து அடித்தது.

பரபரப்பான சாலையில் இச் சம்பவம் நடந்தது. ஆனால், இதனை அங்கிருந்த யாரும் எதிர்க்கவில்லை. இது தொடர்பாக தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீஸார் அந்த நபரை மீட்டனர்.

தாக்குதலில் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்த 13 பேரை கைது செய்ததாக மங்களூரு காவல்துறை ஆணையர் எஸ்.முருகன் தெரிவித்தார். மேலும், தப்பித்து ஓடிய 4 முக்கிய நபர்களை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், விசாரணையில் தாக்குதலுக்குள்ளான நபரது பெயர் ஷகீர் (28) என்று தெரியவந்துள்ளது. ஷகீரும் அந்த பெண்ணும் சூப்பர் மார்க்கெட்டில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த கும்பலால் தாக்குதலுக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் பஜ்ரங் தள இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் மங்களூரு நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலை கண்டித்து இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இளைஞர் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை உள்ளூர் சேனல் நேரலையில் ஒளிபரப்பியது.இதனைப் பார்த்தே, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தாக்குதலுக்குள்ளானவரை மீட்டனர்.

பாதிக்கப்பட்ட நபர் மங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 'தி இந்து'வுக்கு அளித்த பேட்டியில், "சம்பவம் குறித்து தெரிந்ததும் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் யாரும் சம்பவத்தை தடுக்கவில்லை. என்னை அவர்கள் அடித்து துன்புறுத்தியதை நூற்றுக்கணக்கானோர் நின்று வேடிக்கை பார்த்தனர். ஒருவரும் உதவிட முன்வரவில்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x