வன்முறை பேச்சு; வழக்குப்பதிவு செய்ய ஒரு மாத கால அவகாசம்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

வன்முறை பேச்சு; வழக்குப்பதிவு செய்ய ஒரு மாத கால அவகாசம்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

டெல்லி கலவரம் தொடர்பாக பாஜக தலைவர்கள் 3 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 3 நாட்களாக நடந்த கலவரத்தில் 27 பேர் பலியானார்கள். 150-க்கும் மேற்பட்டோர், போலீஸார், பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

இந்தக் கலவரம் தொடங்குவதற்கு முன்பாக, பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ரா, மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர், எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோர் மக்களைத் தூண்டிவிடும் வகையில் வெறுப்புணர்வுடன் பேசியதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதையடுத்து டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.முரளிதர் தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர், " பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில் ‘‘வன்முறையை தூண்டும் விதமாக 3 பேர் பேசியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுபோன்ற மேலும் பல பேச்சுகள் தொடர்பான வீடியோக்கள் கிடைத்துள்ளன. எனவே ஒரு சிலர் மட்டுமே பேசியதாக கருதி விட முடியாது. இதுபற்றி விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்ய கால அவகாசம் தேவை’’ எனக் கூறினார்.

இதையடுத்து தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் இதுதொடர்பாக விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in