

டெல்லி கலவரத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக வாட்ஸ்அப் குழுக்களை கண்காணிக்க டெல்லி போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஏற்கெனவே பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ள நிலையில் மேலும் இறந்தநிலையில் மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு வன்முறை தணிந்து வரும் நிலையில் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக சிலர் வதந்தி பரப்பி வருவதாக டெல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
வாட்ஸ் அப் மூலமாக டெல்லியில் கலவரத்தை பெரிதாக்கும் வகையில் பல்வேறு தகவல்களை சில சமூகவிரோதிகள் பரப்பி வருவதாகவும், இதன் மூலம் பொதுமக்களிடையே தவறான தகவல்களை கொண்டு சேர்க்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் உளவுத்துறை தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து வாட்ஸ் அப் குழுக்களை கண்காணிக்கும் நடவடிக்கையை டெல்லி போலீஸார் தொடங்கியுள்ளனர்.