Last Updated : 27 Feb, 2020 07:59 AM

 

Published : 27 Feb 2020 07:59 AM
Last Updated : 27 Feb 2020 07:59 AM

கபில் மிஸ்ரா ட்வீட்டுக்குப் பின் எச்சரித்த டெல்லி உளவுத்துறை- அலட்சியத்தால் கலவரம் மூண்டதா?

பாஜகவின் தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ராவின் ட்விட்டர் பதிவுக்குப் பின் டெல்லி உளவுத்துறை கலவரம் மூளும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் அலட்சியமாக இருந்ததால் கலவரம் மூண்டதாக தெரியவந்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக ஷாஹீன்பாக்கை போல் டெல்லியில் மேலும் சில இடங்களில் போராட்டம் துவங்கியது. ஜாப்ராபாத்தின் மோஜ்பூர் சந்திப்பில் சுமார் இரு வாரங்களாக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால், அப்பகுதியின் மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீஸாரும் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தனர். இச்சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா ஒரு ட்வீட் செய்து பொதுமக்களை அங்கு அழைத்திருந்தார். இவர் சமீபத்தில் முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.

இந்நிலையில், கபில் மிஸ்ராவின் ட்வீட் அழைப்பால் கூடும் சிஏஏ ஆதரவாளர்களால் இரு தரப்பிலும் மோதல் உருவாகும் என உளவுத்துறை எச்சரித்தது. இது மதக் கலவரமாகவும் மாறும் வாய்ப்பிருப்பதாக டெல்லி உளவுத்துறையால் அப்பகுதி காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், போலீஸார் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கவனக்குறைவாக இருந்துள்ளனர். இந்த அலட்சியமே கலவரம் மூள்வதற்கு காரணமாகி விட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் டெல்லி உளவுத்துறை வட்டாரத்தினர் கூறும்போது, ‘‘கபில் மிஸ்ராவின் அழைப்பை ஏற்று வந்த கூட்டத்துடன் இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டு கலவரம் துவங்கியது. அப்போது, அப்பகுதி போலீஸார் மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தனர். நான்கு முறை எழுத்து மூலம் நாங்கள் அளித்த தகவலை உயர் அதிகாரிகளும் புறக்கணித்தது கலவரத்திற்கு காரணமாகி விட்டது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x