Published : 27 Feb 2020 07:57 AM
Last Updated : 27 Feb 2020 07:57 AM

போலி ஆவணம் தொடர்பான வழக்கில் சரணடைந்த சமாஜ்வாதி எம்.பி. ஆசம் கான், மனைவி மகனுக்கு மார்ச் 2 வரை நீதிமன்ற காவல்

போலி ஆவணம் தயாரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராம்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆசம் கான், அவரது மனைவி தன்சீன் பாத்திமா, மகன் அப்துல்லா ஆசம் ஆகிய மூவரும் மார்ச் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசம் கான், உ.பி.யின் ராம்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவரது மனைவி தன்சீன் பாத்திமா, மகன் அப்துல்லா ஆசம் ஆகிய இருவரும் உ.பி.யில் கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் முறையே ராம்பூர் மற்றும் சுவார் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அப்துல்லா ஆசம், தேர்தலில் போட்டியிடுவதற்கான 25 வயதை அடையவில்லை என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அப்துல்லா ஆசம் எல்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது.

இதையடுத்து போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்ததாக ஆசம் கான், தன்சீன் பாத்திமா, அப்துல்லா ஆசம் ஆகியோருக்கு எதிராக ராம்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராக மூவருக்கு எதிராகவும் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மூவரும் ராம்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர். இவர்களை வரும் மார்ச் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சமாஜ்வாதி கட்சி மறைமுகமாக சாடியுள்ளது. நீதிமன்ற உத்தரவை மாநில பாஜக வரவேற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x