Published : 27 Feb 2020 06:44 AM
Last Updated : 27 Feb 2020 06:44 AM

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியபோது தைரியமாக எதிர்கொண்டேன்- டெல்லி தலைமைக் காவலர் பேட்டி

டெல்லியில் நடந்த வன்முறையின்போது கலவரத்தில் ஈடுபட்ட ஒருவர் என்னை நோக்கி துப்பாக்கியைக் காட்டி மிரட்டியபோது அதை தைரியமாக எதிர்கொண்டேன் என்று டெல்லி காவல்துறையைச் சேர்ந்த தலைமைக் காவலர் தீபக் தாஹியா (31) தெரிவித்தார்.

டெல்லியில் குடியுரிமை சட்டத்தின் (சிஏஏ) ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை கிழக்கு டெல்லி பகுதியில் கலவரத்தை அடக்கச் சென்ற போலீஸாரை நோக்கி துப்பாக்கியைக் காட்டி இளைஞர் ஒருவர் மிரட்டிய வீடியோ வைரலானது.

அந்த நபரை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். அவர் டெல்லியைச் சேர்ந்த ஷாருக் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மிரட்டப்பட்ட போலீஸ் தலைமைக் காவலர் தீபக் தாஹியா கூறும்போது, “நான் சோனேபட் பகுதியைச் சேர்ந்தவன். டெல்லி போலீஸில் 2010-ம் ஆண்டு சேர்ந்தேன். இதனிடையே தேர்வு எழுதி தலைமைக் காவலராக பதவி உயர்வு பெற்றேன்.

கலவரம் நடந்த அன்று எனக்கு மவுஜ்புர் சவுக் பகுதியில் பாதுகாப்புப் பணி வழங்கப்பட்டிருந்தது. வன்முறைச் சம்பவங்கள் அதிகமாகி வந்த நிலையில் நான் கையில் லத்தியுடன் கலவரக்காரர்களை தடியடி நடத்தி விரட்ட முயன்றேன். அப்போது திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியை என்னை நோக்கி காட்டியபடி மிரட்டினார். எனது கையில் லத்தி மட்டுமே இருந்ததது. வேறு ஆயுதங்கள் இல்லை. அப்போது அவரது கவனத்தைத் திசை திருப்ப நான் மறுபக்கம் குதித்தேன்.

வேறு யாரும் என் வழியில் குறுக்கிடாதபடி அந்த இளைஞரை என் வசமே வைத்திருந்தேன்.

கலவரத்தில் வேறு யாரும் அங்கு இறக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அவரை நோக்கி தைரியமாக நடந்தேன். மக்களுக்கு பாதுகாப்பைத் தருவது எனது பணி. அதைச் செய்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். பின்னர் அந்த நபர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதற்குள் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. அந்த நிலைமையை நான் தைரியமாக எதிர்கொண்டேன். இந்த விவரம் எனது குடும்பத்தாருக்கு தெரியாது.

என்னுடைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதும், எனது மனைவி என்னை அழைத்து பேசினார். என்னுடைய படம் தொலைக்காட்சியில் சரியாகத் தெரியாவிட்டாலும், அது நான்தான் என்பதை என்னுடைய உடையை வைத்து எனது மனைவி கண்டுபிடித்துவிட்டார். அவர் மிகவும் கவலையாக இருந்தார். அவருக்கு நான் ஆறுதல் கூறினேன்” என்றார்.

தீபக் தாஹியாவின் தந்தை, இந்திய கடலோரக் காவல்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது 2 சகோதரர்களில் ஒருவர் டெல்லி போலீஸிலும், மற்றொருவர் கடலோரக் காவல்படையிலும் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x