Last Updated : 26 Feb, 2020 04:12 PM

 

Published : 26 Feb 2020 04:12 PM
Last Updated : 26 Feb 2020 04:12 PM

டெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின் கைகளில் சீக்கிய ரத்தக் கறை: சோனியாவுக்கு பாஜக பதிலடி

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அளித்த காட்சி : ஏஎன்ஐ

புதுடெல்லி

டெல்லியில் கலவரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினார். இந்நிலையில் அதற்கு பாஜக சார்பில் கடும் பதிலடி தரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அசிங்கமான, நாகரிகமற்ற அரசியல் செய்கிறார், காங்கிரஸ் கைகளில்தான் சீக்கியர்கள் ரத்தக்கறை படிந்துள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாள் கலவரத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள், போலீஸார் காயமடைந்துள்ளனர்.

கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நிருபர்களுக்குப் அளித்த பேட்டியில், "கலவரத்துக்கு மத்திய அரசு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் கலவரத்துக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினா செய்யவேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

சோனியா காந்திக்குப் பதிலடி தரும் வகையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பிரகாஷ் ஜவடேஹர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், " டெல்லி கலவரத்தைப் பற்றிப் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கலவரத்துக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது நகைப்புக்குரியது.

காங்கிரஸ் கைகளில்தான் சீக்கியர்கள் ரத்தக்கறை படிந்துள்ளது.சீக்கியர்களை கொன்று குவித்தவர்கள்தான் வன்முறையை நிறுத்துவது குறித்தும், வெற்றி குறித்தும் பேசுகிறார்கள். அமித் ஷா எங்கே என்று காங்கிரஸ் கேட்கிறது. அவர் அனைத்துக்கூட்டத்தில் நேற்று ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன்தான் பங்கேற்றார். டெல்லி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமித் ஷா போலீஸாருடன் இணைந்து தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறார்.

காங்கிரஸ் தலைமைதான் போலீஸாரின் மனஉறுதியைக் குலைக்கும்வகையில் பேசுகிறது. சோனியாவின் இதுபோன்அற கருத்துக்களும், அரசியலும் போலீஸாரின் மனஉறுதியை உயர்த்த உதவாது. வன்முறை முடிவுக்கு வந்துவிட்டது. கலவரம் குறித்து விசாரணை நடக்கும்போது, உண்மை வெளிவரும்.இந்த விஷயத்தில் தயவுசெய்து அரசியல் செய்யாதீர்கள்.

கலவரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தும்போதுதான் யார் கற்களை கொண்டுவந்தது, துப்பாக்கியால் சுட்டது, வாகனங்களுக்கு தீ வைத்தது, மக்களைத் தூண்டிவிட்டது போன்ற உண்மைகள் தெரியவரும். உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. இந்த இக்கட்டான சூழலில் மத்திய அரசை விமர்சிப்பதும், வன்முறையை அரசியலாக்குவதும் நாகரிகமற்ற அரசியல், அசிங்கமான அரசியல்.

டெல்லியில் அமைதியைக் கொண்டு வருவதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. அதற்காகவே காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தையும் அமித் ஷா கூட்டியுள்ளார்''.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x