Last Updated : 26 Feb, 2020 01:49 PM

 

Published : 26 Feb 2020 01:49 PM
Last Updated : 26 Feb 2020 01:49 PM

டெல்லி வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர்; போலீஸார் கடமையைச் செய்ய மத்திய அரசு ஏன் அனுமதிக்கவில்லை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

டெல்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் தவறிவிட்டனர். அவர்கள் கடமையைச் செய்வதற்கு மத்திய அரசு ஏன் அனுமதிக்கயளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் டெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் அவற்றை விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் ஷாகின் பாக்கில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் மனுவை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஷாகின் பாக்கில் போராடி வரும் மக்களை அப்புறப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேபோல, டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா உள்ளிட்ட சிலர் பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.கவுல், கே.எம்.ஜோஸப் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜோஸப், கவுல் இருவரும் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கு போலீஸாருக்கும், மத்திய அரசுக்கும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர்.

நீதிபதி ஜோஸப் கூறுகையில், "டெல்லியில் நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தவறிவிட்டனர். டெல்லி போலீஸார் யாரிடமும் அனுமதிக்காக காத்திருக்காமல் சட்டத்தின் அடிப்படையில் கடமையைச் செய்திருக்க வேண்டும். டெல்லி போலீஸார் கடமையைச் செய்ய அனுமதிக்க மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதான் கலவரம் பெரிதாகக் காரணமாகியுள்ளது.

நான் சட்டத்துக்கு உண்மையுள்ளவனாக இருக்க விரும்புகிறேன். டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைத்து மிகவும் வேதனையாக இருக்கிறது. பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை போலீஸார் நடைமுறைப்படுத்தும்போது, இன்னும் திறமையாகவும், கடமையுணர்வுடன் செயல்பட முடியும்.

டெல்லி கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டார்கள். வடகிழக்கு டெல்லியில் வகுப்புவாத மோதல்கள் ஏற்படும் முன், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது டெல்லி போலீஸார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?.

கலவரத்தைத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முன் டெல்லி போலீஸார் யாரிடமும் அனுமதிக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. சட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டிருக்க வேண்டும். வெறுப்புப் பேச்சு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.

அரசியல் கட்சிகளும், மற்ற அமைப்புகளும் சேர்ந்து டெல்லி நகரின் பதற்றத்தைத் தணிக்க வேண்டும். சமூகத்தில் இதுபோன்ற நடத்தை, சம்பவங்கள் நடக்கக்கூடாது. டெல்லியின் பதற்றத்தைத் தணிக்க அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் முயல வேண்டும். ஆரோக்கியமான விவாதம் மட்டுமே இருக்கலாம். இதுபோன்ற வன்முறை கூடாது.

இங்கிலாந்து, அமெரிக்காவில் போலீஸாரைப் பாருங்கள். அங்கு ஏதாவது தவறு நடந்தால், யாரிடமும் கேட்காமல் சட்டத்தின்படி செயல்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.

அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், "டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. டெல்லி போலீஸார் தொடர்பாகக் கடுமையான கருத்துகள் தெரிவித்தால் அவர்கள் மனவலிமையைக் குலைத்துவிடும்" எனக் கேட்டுக்கொண்டார்

இதையடுத்து, டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரிப்பதால் மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல் ஷாகின் பாக்கில் போராட்டம் நடத்தி வருபவர்களை அப்புறப்படுத்தும் மனு குறித்து நீதிபதி ஜோஸப் கூறுகையில், "இப்போதுள்ள சூழலில் அந்த மனு மீது எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அதற்கான ஆரோக்கியமான சூழல் இல்லை. இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். நடந்த சம்பவங்கள் அனைத்தும் துரதிர்ஷ்டமானவை. அவை நடந்திருக்கக் கூடாது. ஷாகின் பாக் விவகாரத்தில் நிவாரணம் பெறத் தனியாக மனுத்தாக்கல் செய்யுங்கள்" எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x