Last Updated : 25 Feb, 2020 09:07 PM

 

Published : 25 Feb 2020 09:07 PM
Last Updated : 25 Feb 2020 09:07 PM

டெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி கலவரத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக கலவரம் நடந்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட போலீஸார், மக்கள் காயமடைந்துள்ளனர்

இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா உள்ளிட்ட சிலர் பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.கவுல், கே.எம்.ஜோஸப் ஆகியோர் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வருகிறது. அதோடு, ஷாகின் பாக் போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்த அனுப்பப்பட்ட மத்தியஸ்தர்கள் அளித்த அறிக்கையையும் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார்கள் .

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனு ஒன்றை ஹபிபுல்லா, பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர், சமூக ஆர்வலர் பகதூர் அப்பாஸ் நக்வி ஆகியோர் தாக்கல் செய்தனர். அதில், ஷாகின் பாக் பகுதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் பெண்களுக்கும், நாட்டின் மற்ற இடங்களில் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கக் கோரி தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ரா சிஏஏவுக்கு ஆதரவாக மஜ்பூர்-போரபூர் பகுதியில் பேரணி நடத்தினார். அப்போது ஜாப்ராபாத் பகுதியில் அமைதியான முறையில் சிஏஏவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். சிஏஏ ஆதரவாளர்களைத் தனது வெறுப்புப் பேச்சின் மூலம் கபில் மிஸ்ரா தூண்டிவிட்டார் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி கலவரம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், சமூகச் செயற்பாட்டாளர் பரா நக்வி ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களும் நாளை விசாரணைக்கு வருகிறது.

அந்த மனுவில், வடகிழக்கு டெல்லியில் நடக்கும் வன்முறை தொடர்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யக் கோரி அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும், பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா, கபில் மிஸ்ரா ஆகியோர் வெறுப்புணர்வுடன் பேசியுள்ளார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x